எஸ்.வி.சேகர் மீது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுத்து விட்டோம்: தமிழிசை திடீர் அறிவிப்பு
எஸ்.வி.சேகரை கட்சியில் இருந்து ஒதுக்கி வைத்துள்ளதாக தமிழிசை தெரிவித்துள்ளார்
கோவை: எஸ்.வி.சேகர் மீது கட்சி ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு விட்டது என்றும் அவருக்கு எந்தவித பொறுப்போ, பணிகளோ இனி தரமாட்டோம் என்றும் தமிழிசை சவுந்தராஜன் தெரிவித்துள்ளார். பெண்களை இழிவுபடுத்தியது யாராக இருந்தாலும் தவறுதான் என்று கூறிய அவர், சட்டம் தன் கடமையை செய்யட்டும் என்று கூறியுள்ளார்.
கோவையில் செய்தியாளர்களிடம் தமிழிசை சவுந்தரராஜன் சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
மோடியின் மக்கள் மருந்தகம் மக்களுக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளதுடன், மருத்துவ செலவுகள் குறைந்துள்ளது. தமிழகத்தை போராட்ட களமாக வைத்திருக்க வேண்டும் என சிலர் திட்டம் போட்டு கிராமங்களுக்கு சென்று ரகசியமாக ஆட்களை திரட்டி வருகிறார்கள். ஜல்லிக்கட்டு, நீட் தேர்வு, தூத்துக்குடி ஸ்டெர்லைட் போன்ற போராட்டங்களை நடத்தி அமைதியை சீர்குலைக்க சதிதிட்டம் நடந்து வருகிறது. பிரதமர் மோடியை கொலை செய்ய மாவோயிஸ்டுகள் போட்ட திட்டம் அதிர்ச்சி அளிக்கிறது. அரசியலில் எதிர்கட்சிகளை, எதிரி கட்சிகளாக பார்க்கக்கூடாது.
நீட் தேர்வை பொறுத்தவரை அதிகம் மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது. மொத்தம் 4000 மருத்துவ சீட்டுகள்தான் உள்ளன. இதில் சேர மாணவர்கள் எப்படி முன்னேறி வருகிறார்கள் என்பதுதான் முக்கியம். பல ஏழை மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதனை முன்னிலைப்படுத்தாமல் தோல்விகளை மட்டுமே பெரிதுபடுத்துவது வேதனை அளிக்கிறது.
குருவை சாகுபடிக்கு தமிழக அரசு உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும். விவசாயத்தை மேம்படுத்தும் பணிகளை தமிழக அரசு செய்ய வேண்டும். ஸ்டெர்லைட் விவகாரத்தில் மத்திய அரசு தன் கடமையை செய்யும். சுற்றுச்சூழல் தொடர்பான விஷயங்களில் தமிழக அரசுதான் முன்னெடுக்க வேண்டும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு கிடைக்கிறது. பெருநகரங்களில் சங்கிலி பறிப்பு தொடர்கதையாக உள்ளது. சட்டம் ஒழுங்கு பிரச்சினையில் காவல்துறை கவனம் செலுத்த வேண்டும்
இவ்வாறு தமிழிசை சவுந்தராஜன் தெரிவித்தார். பின்னர், எஸ்.வி சேகரை இன்னமும் தமிழக காவல்துறையால் கைது செய்ய முடியவில்லையே என செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு எஸ்.வி.சேகர் மீது கட்சி ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு விட்டது, அவருக்கு எந்தவித பொறுப்போ, பணிகளோ தரமாட்டோம் என்று பதிலளித்தார். மேலும், பெண்களை இழிவுபடுத்தியது பாஜகவை சேர்ந்த எஸ்.வி.சேகராக இருந்தாலும் அது தவறுதான் என்று தெரிவித்த தமிழிசை சட்டம் தன் கடமையை செய்யட்டும் என்றார்.
நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் இதுவரை எஸ்.வி.சேகர் கைது செய்யப்படவில்லை. பொது நிகழ்ச்சிகளில் உலா வரும் அவரை காவல்துறையும் இதுவரை தேட முயற்சியும் எடுக்கவில்லை. இன்றோடு 49 நாட்கள் ஆன நிலையில், தலைமறைவாகி. உள்ள அவர் மீது கட்சியும் அதிகாரபூர்வமான நடவடிக்கையை ஏன் எடுக்கவில்லை என குழம்பியுள்ள நிலையில் எஸ்வி.சேகர் மீது கட்சி ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுவிட்டது என்று தமிழிசை சவுந்தராஜன் அறிவித்துள்ளது மேலும் குழப்பத்தையே உண்டாக்கியுள்ளது.