இரட்டை இலை எதற்கு? 234 தொகுதிகளிலும் ஜெயிக்க எங்களுக்கு குக்கர் போதும்: தங்க தமிழ்செல்வன்
குக்கர் சின்னத்தை கொண்டே 234 தொகுதிகளிலும் வெற்றி பெற முடியும் என்று தங்க தமிழ்செல்வன் குறிப்பிட்டு உள்ளார்.
சென்னை : தமிழகம் முழுவதும் வெற்றி பெற எங்களுக்கு குக்கர் சின்னமே போதும் காரணம் அதிமுக தொண்டர்கள் இப்போது எங்கள் பக்கம் உள்ளனர் என்று தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்செல்வன் தெரிவித்து உள்ளார்.
நடந்து முடிந்த ஆர்.கே நகர் தொகுதிக்கான இடைத்தேர்தலில், டி.டி.வி தினகரன் வெற்றி பெற்று உள்ளார். இதனையடுத்து இன்று தலைமை செயலகத்தில் சட்டமன்ற உறுப்பினராக தினகரன் பதவி ஏற்கிறார். இதனையடுத்து அவரது ஆதரவாளர்கள் தீவிர உற்சாகமடைந்து உள்ளனர்.
இந்நிலையில், அவரது ஆதரவாளர் தங்க தமிழ்செல்வன் இன்று சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, சட்டமன்ற வளாகத்திற்கு நாங்கள் வருவது தெரிந்து அனைத்து அமைச்சர்களும் கோவையிலும், ஊட்டியிலும் தஞ்சமடைந்து உள்ளனர் என்று தகவல் வந்து உள்ளது.
தினகரன் பதவியேற்கும் முன்னரே இப்படி இருந்தால், இன்னமும் சட்டமன்றத்திற்குள் எங்கள் அண்ணனும், 18 சட்டமன்ற உறுப்பினர்களும் நுழைந்தால் என்ன நடக்கும் என்று சொல்லி தெரிய வேண்டியது இல்லை. எங்களால் குக்கர் சின்னத்திலேயே 234 தொகுதிகளிலும் வெற்றி பெற முடியும். ஆனால், இப்போது இருக்கும் அதிமுக நிலை சொல்லி தெரிய வேண்டியது இல்லை.
எங்களை எதிர்த்தவர்கள் முகத்தில் கரியை பூசிவிட்டு சட்டசபைக்குள் வந்துள்ளார் தினகரன். அனைத்து அதிமுக நிர்வாகிகளும் எங்கள் பக்கம் தான் உள்ளனர். இதை விரைவில் சிலர் புரிந்து கொள்வார்கள். ரஜினி அரசியலுக்கு வந்தால் இது மிகவும் காலம் கடந்த முடிவு. இப்போது தான் அவருக்கு ஞானோதயம் வந்து உள்ளது. ஆனால், அது வீண் முயற்சி என்று அவர் தெரிவித்து உள்ளார்.
ஜெ.வீடியோ தினகரனுக்கு தெரியாமல் வெளியிடப்பட்டது தான். அதில் இப்போது குறைகள் கண்டுபிடித்துக்கொண்டு இருக்கிறார் ஆனந்தராஜ். அவர் மனதில் எதோ ஜி.டி.நாயுடு என்று நினைத்துக்கொண்டு இருக்கிறார் போல தெரிகிறது என்று தங்க தமிழ்செல்வன் குறிப்பிட்டு உள்ளார்.