ரஜினியின் அரசியல் தமிழக மக்களிடையே எடுபடுமா என்பது சந்தேகம் தான்: ஜெ.தீபா கருத்து
ரஜினியின் அரசியல் தமிழக மக்களிடையே எடுபடுமா என்பது சந்தேகம் தான் என்று ஜெ.தீபா கருத்து தெரிவித்து உள்ளார்.
சென்னை : நடிகர் ரஜினியின் அரசியல் தமிழக மக்களிடையே எடுபடுமா என்பது சந்தேகம் தான் என்று எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவையின் மாநில பொதுச்செயலாளர் ஜெ.தீபா கருத்து தெரிவித்து உள்ளார்.
புத்தாண்டு தினத்தையொட்டி, திருவொற்றியூரில் உள்ள வீடு இல்லாதோர் தங்கும் விடுதியில் உள்ள முதியவர்கள் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு அன்னதானம் மற்றும் போர்வை வழங்கும் விழாவில் கலந்து கொண்டார் எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவையின் மாநில பொதுச்செயலாளரும், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகளுமாகிய ஜெ.தீபா.
அப்போது அவர் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். ரஜினியில் அரசியல் அறிவிப்பு குறித்த கேள்விக்கு, நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவது வரவேற்கத்தக்கது. ஆனால், அவரால் தமிழகத்தில் தற்போது நிலவி வரும் அரசியல் சூழ்நிலை சமாளிக்க முடியுமா ? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
ரஜினியின் தனிகட்சி தமிழகத்தில் எந்த மாதிரியான அரசியல் பாதிப்பை ஏற்படுத்தும் என்கிற கேள்விக்கு, இனிமேல் தான் அவர் தனது கட்சி குறித்த அறிவிப்பை வெளியிட இருக்கிறார். அதன் பிறகு தான் அவரது கொள்கை என்ன? மக்கள் பிரச்னைகளில் அவரது நிலைப்பாடு என்ன? என்பது தெரிய வரும்.
சினிமாவும் அரசியலும் வேறு வேறு என்பதை புரிந்து கொண்டு அரசியலில் இறங்கி இருக்கிறாரா? அவரது அரசியல் கொள்கைகள் தமிழக மக்களிடையே எடுபடுமா என்பதும் சந்தேகம் தான் என்றும் ஜெ.தீபா கருத்து தெரிவித்து உள்ளார்.
மக்கள் பிரச்னைகளை தீர்க்க வேண்டிய அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறது. இந்த அரசால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை. எனவே இந்த அரசை விரைவில் கலைக்க வேண்டும் என்றும் ஜெ.தீபா வேண்டுகோள் விடுத்து உள்ளார்.