3வது அணி அமைக்கும் எண்ணமில்லை.. ஸ்டாலினை சந்தித்த சந்திரசேகர ராவ் பேட்டி!
3வது, 4வது அணியெல்லாம் அமைக்கும் திட்டம் எங்களுக்கு இல்லை என்று தெலுங்கானா முதல்வர் சந்திர சேகர் ராவ் ஸ்டாலினை சந்தித்த பின் பேட்டி அளித்துள்ளார்.
Recommended Video
சென்னை: 3வது, 4வது அணியெல்லாம் அமைக்கும் திட்டம் எங்களுக்கு இல்லை என்று தெலுங்கானா முதல்வர் சந்திர சேகர் ராவ் சென்னையில் ஸ்டாலினை சந்தித்த பின் பேட்டி அளித்துள்ளார்.
கோபாலபுரத்தில் கருணாநிதியை சந்தித்து நலம் விசாரிக்க தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் இன்று காலை சென்னை வந்தார். அதன்பின் அவர் ஆழ்வார்பேட்டையில் ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்தினார். இதில் மூன்றாவது அணி குறித்து நாடாளுமன்ற தேர்தலுக்காக விவாதிக்கப்படும் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில் சந்திர சேகர் ராவ் ஸ்டாலினை சந்தித்த பின் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் ''சகோதரர் ஸ்டாலினுடன் பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசினேன். 2004ஆம் ஆண்டுக்கு பிறகு திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து பேசி உள்ளேன்.'' என்றுள்ளார்.
மேலும் ''மதசார்பற்ற நாடாக இந்தியா இருக்க வேண்டும். அதை நோக்கியே எங்கள் பயணம் இருக்கிறது.பல்வேறு முக்கியமான நலத்திட்டங்கள் குறித்து விவாதித்தோம் . விவசாயிகள் பிரச்சனை குறித்து பேசினோம். மே 10ல் நடக்கும் விவசாயிகள் நலத்திட்ட விழாவிற்கு ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்தேன்'' என்றார்.
மேலும் '' 3வது, 4வது அணியெல்லாம் அமைக்கும் திட்டம் எங்களுக்கு இல்லை. மத்திய, மாநில அரசு உறவுகள் குறித்து விரிவாக ஸ்டாலினிடம் பேசினேன். மாநில சுயாட்சி குறித்து ஸ்டாலினிடம் விவாதித்தேன். கல்வி, மருத்துவம், தண்ணீர் உள்ளிட்டவற்றை வழங்குவதில் மத்திய அரசு சரிவர செயல்பட வில்லை. மாநிலங்களுக்கு கூடுதல் நிதி, அதிகாரங்கள் தேவைப்படுவது குறித்து விவாதித்தோம்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
முன்னதாக பேசிய ஸ்டாலின், நாங்கள் கூட்டணி குறித்த பேசவில்லை. கூட்டணி குறித்த முடிவுகள் தேர்தலின் போது அறிவிக்கப்படும் என்று கூறினார்.