கத்தியை தீபாவளிக்கு அனுமதிப்போம், விஜய்யே வாங்கி தன் பெயரில் வெளியிட்டால்! - வேல் முருகன்
கத்தியை தீபாவளிக்கு அனுமதிக்க மாட்டோம். ஒரு வேளை நடிகர் விஜய்யே வாங்கி தன் பெயரில் வெளியிட்டால் எதிர்ப்பைக் கைவிடுவோம், என்றார் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் அமைப்பாளர் வேல் முருகன்.
தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம் சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு வேல்முருகன் தலைமை வகித்தார். இதில் 150க்கும் மேற்பட்ட அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வேல்முருகன், 'இலங்கை அதிபர் ராஜபக்சேவின் உறவினர் கூட்டாளியாக உள்ள லைக்கா நிறுவனம் விஜய் நடிக்கும் கத்தி படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தை தமிழகத்தில் திரையிடக் கூடாது என்று பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தோம்.
இந்த நிலையில் தீபாவளிக்கு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. லைக்கா நிறுவனர் ‘எங்களது 2 நாள் வருமானம்தான் இந்தக் கத்தி திரைப்படத்தின் தயாரிப்புச் செலவு' என்று கூறினார் அல்லவா..? அப்படியென்றால், வேறு ஏதாவது ஒரு நலிந்த தயாரிப்பாளரிடம் இந்த படத்தைக் கொடுத்து வெளியிடச் சொல்லலாமே.
இத்திரைப்படத்தை வெளியிடக் கூடாது என்பதற்காக தமிழ்நாடு திரைப்பட உரிமையாளர்கள் கூட்டமைப்பின் தலைவர், விநியோகஸ்தர்களை சந்தித்து பேச உள்ளோம். சந்திப்பின்போது எங்களது கோரிக்கை நிறைவேறாத பட்சத்தில் கத்தி திரைப்படத்தை தீபாவளி அன்று தமிழகம் முழுவதும் திரையிட அனுமதிக்க மாட்டோம்.
ஒருவேளை நடிகர் விஜய்யே இந்தப் படத்தை தன் பெயரில் வாங்கி வெளியிட்டால் எதிர்ப்பு நிலையைக் கைவிடுவோம்,' என்றார்.