ஸ்ரீரங்கம் தேர்தல் மட்டும் நேர்மையாக நடந்தால் நாங்கள் சரித்திர சாதனை படைப்போம்: தமிழிசை
சென்னை: ஸ்ரீரங்கத்தில் இடைத்தேர்தல் நேர்மையாக நடந்துவிட்டால் பாஜக சரித்திர சாதனை படைக்கும் என அக்கட்சியின் தமிழ் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் போலி வாக்காளர்கள் வாக்களித்துவிடக் கூடாதே என்ற கவலை தான் எங்களுக்கு. ஸ்ரீரங்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஆளுங்கட்சியின் அதிகார பலமும், பண பலமும் உள்ளது.
கொட்டாம்பட்டி, முடையம்பட்டி, வியாழன்மேடு ஆகிய பகுதிகளில் வாக்களிக்க போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவில்லையாம். அதனால் அந்த இடங்களுக்கு பாதுகாப்பு அளிக்குமாறு தேர்தல் ஆணையத்தை கேட்டுக் கொள்கிறேன். தேர்தல் ஆணையம் சட்டத்திற்கு ஏற்றது போல் செயல்பட வேண்டும். பிரச்சாரத்தின்போது அதிமுக-பாஜகவினர் இடையே ஏற்பட்ட மோதலில் பாஜகவினர் தான் அதிகம் தாக்கப்பட்டனர். அப்படி இருந்தும் பாஜகவினர் மீது தான் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சட்டத்தை தன் பக்கம் இழுத்துவிடலாம் என்று ஆளுங்கட்சி நினைப்பது கண்டிக்கத்தக்கது. தேர்தல் ஆணையம் தேர்தலை நடுநிலையுடன் நடத்த வேண்டும். ஒரு அணியில் ஊழல் மிகுந்த அதிமுகவும், திமுகவும் உள்ளது. எதிரணியில் நேர்மையான பாஜக உள்ளது.
இது ஊழலுக்கும், நேர்மைக்கும், நீதிக்கும், அநீதிக்கும், பண பலத்துக்கும், மன பலத்துக்கும் இடையே நடக்கும் தேர்தல் ஆகும். இந்த தேர்தல் முடிவை நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. நாங்கள் ஊழல் அற்றவர்கள் என்பதை ஸ்ரீரங்கம் மக்கள் நிரூபிக்க வேண்டும்.
வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தாலும், பெற்றாலும் அது தண்டனைக்குரியது என்று சட்டம் கொண்ட வர உள்ளது பாஜகவின் மத்திய அரசு. ஸ்ரீரங்கத்தில் மட்டும் தேர்தல் நேர்மையாக நடந்தால் பாஜக சரித்திர சாதனை படைக்கும்.
பாஜக வேட்பாளர், வாக்குச்சாவடி முகவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். என் வீட்டிற்குள் பட்டாசை வீசினார்கள். இது தவிர என்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் மாநகராட்சி உறுப்பினர் ஒருவர் எனக்கு மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து நான் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவில்லை என்றார்.