அடுத்த நூற்றாண்டை இந்தியாவினுடையதாக மாற்ற வேண்டும்: மோடி
சென்னை: வரும் நூற்றாண்டை இந்தியாவினுடையதாக மாற்ற வேண்டும் என்று குஜராத் முதல்வரும் பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
சென்னையில் மூத்த பத்திரிகையாளர் அருண்ஷோரியின் நூல் வெளியீட்டு விழாவில் வணக்கம் என்று தமிழில் கூறிவிட்டு நரேந்திர மோடி பேசியதாவது:
ஆங்கிலேயரிடம் இருந்து விடுதலை பெற மட்டுமே சுதந்திரப் போராட்டம் அல்ல.. சர்வதேச அளவிலான காலனி ஆதிக்கத்துக்கு எதிரான இயக்கத்தின் ஒருபகுதியாகவுமே சுதந்திரப் போராட்டம் இருந்தது. அதனடிப்படையிலேயே வெளியுறவுக் கொள்கை உருவெடுத்தது.
ஆசிய, கிழக்காசிய நாடுகளுக்கும் நமக்கும் இடையே புத்தர்தான் பொது இணைப்பாக இருக்கிறார். இந்த இணைப்பை நாம் பலப்படுத்த வேண்டும். 60 ஆண்டுகாலமாக அண்டை நாடுகளின் நல்லுறவை நாம் பெறத் தவறிவிட்டோம்.
நாம் பலவீனமாக இருக்கிறோம்
உலக நாடுகளில் பொதுவாக பாதுகாப்பற்ற நிலைமையே காணப்படுகிறது. இந்தியாவை சீனா எப்படியெல்லாம் நடத்துகிறது என்பதை அருண்ஷோரி இந்த புத்தகத்தில் விளக்கியுள்ளார். நாம் பலவீனமாக இருக்கிறோம். நாம் நம்மை பலப்படுத்திக் கொள்ள வேண்டும்.
வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் சக்தியையும் சாந்தியையும் வெளிப்படுத்தினோம். அணு ஆயுத சோதனை நடத்திய போது தடைகள் விதிக்கப்பட்டன. ஆனால் வாஜ்பாயின் அரசியல் திறத்தால் மீண்டும் அணு ஆயுத சோதனை நடத்தினோம்.
பொருளாதாரத் தடைகளே மீண்டும் அணு ஆயுத சோதனை நடத்தும் சக்தியை கொடுத்தது. நாட்டின் பாதுகாப்பின் மீதான அக்கறையினாலே மீண்டும் அணு ஆயுத சோதனை நடத்தப்பட்டது.
ஏன் அவரை அனுப்பினீங்க?
நாட்டின் ரூபாய் மதிப்பு அவசர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறது. அந்த நபரை (நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை) தமிழர்கள் ஏன் டெல்லிக்கு அனுப்பினீர்கள் என தெரியவில்லை.
வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் விலைவாசி கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. நமது ராணுவத்தை வலிமைப்படுத்த, நவீனப்படுத்த டெல்லியில் உள்ள மத்திய அரசு முட்டுக்கட்டையாக இருக்கிறது.
வெளியுறவுக் கொள்கையை வலுவானதாக, பாதுகாப்பானதாக மாற்ற வேண்டிய அவசியம் இருக்கிறது. இந்தியாவைப் போல பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடு எதுவும் இருக்காது.
வாஜ்பாய்தான்...
காஷ்மீர் விவகாரத்தை முதன் முதலில் தீவிரவாதிகள் பிரச்சனையாக உலக அரங்கில் எடுத்து வைத்தார் வாஜ்பாய். பயங்கரவாதத்துக்கு எதிராக உலக நாடுகளுடன் நாம் இணைந்து செயல்பட வேண்டும்.
வியாபாரமும் வர்த்தகமும் மிகவும் முக்கியமானது.. இவைகளே நமது வெளியுறவுக் கொள்கைக்கான வழிகாட்டிகள். நாட்டின் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு சொந்த கட்சியிலேயே ஆதரவு இல்லை.
பயங்கரவாதம் என்பது பிளவுபடுத்தக் கூடியது.. சுற்றுலா என்பதுதான் ஒன்றிணைக்கக் கூடியது.
இதுவா வெளியுறவுக் கொள்கை?
நமது நாட்டின் ராணுவ வீரர்களின் தலைகள் வெட்டி எடுக்கப்படும் போது வெறும் பத்திரிகை செய்திகளோடு போதும் என்று நின்றுவிடுகிறோம். நம் மீதான தாக்குதல்களின் போது அறிக்கைகளோடு நின்றுவிடுகிறோம்.
மக்கள் எப்போதும் பதற்றத்துடன் இருந்தால் இந்த நாடு எப்படி இயங்கும்?. வெளியுறவுத் துறை அமைச்சரோ வெறும் அறிக்கைகளைத்தான் வாசிக்கிறார். சீனாவுக்குப் போகும் வெளியுறவு அமைச்சர் பெய்ஜிங்கில் தங்கவே விரும்புகிறேன் என்கிறார். இதுவா வெளியுறவுக் கொள்கை? இது மாற வேண்டும்.
நமது நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய உடனடி நடவடிக்கைகள் அவசியம். உலக நாடுகளின் விவகாரங்களின் இந்தியா முக்கிய பங்காற்ற வேண்டும். தற்போதைய நூற்றாண்டை ஆசியாவினுடையதாக மாற்ற வேண்டும்
அடுத்த நூற்றாண்டு ஆசியாவினுடையது என்பதை உலகம் ஒப்புக் கொண்டுவிட்டது. நாம் அடுத்த நூற்றாண்டை இந்தியாவின் நூற்றாண்டாக மாற்ற வேண்டும்.
இவ்வாறு நரேந்திர மோடி பேசினார்.