நாளைக்குள் அதிமுக அணிகள் இணைந்துவிடுவோம்: அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நம்பிக்கை
நாளைக்குள் அதிமுக அணிகள் இணைந்துவிடும் என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.
வேலூர்: அதிமுகவின் அணிகள் நாளைக்குள் இணைந்து ஒன்றாக செயல்படுவோம் என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஓபிஎஸ் அணி, ஈபிஎஸ் அணி, டிடிவி தினகரன் அணி என்று பல்வேறு குழுக்களாக செயல்படும் அதிமுக, எப்போது இணையும் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த வெள்ளியன்று சென்னையில், ஜெயலலிதா சமாதியில் ஓபிஎஸ் மற்றும் முதல்வர் ஈபிஎஸ் நேரில் சந்திப்பார்கள் என்றும் அணிகள் இணையும் என்றும் தகவல்கள் பரவின.
ஆனால் அவ்வாறு நடக்காமல் அணிகள் இணைப்பு நிகழ்வு தாமதமாகிக்கொண்டே போகிறது. இந்த நிலையில், வேலூரில் செய்தியாளர்களுக்கு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேட்டியளித்தார்.
அப்போது அவரிடம் அணிகளாக பிரிந்துகிடக்கும் அதிமுக எப்போது இணையும் என்று செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், " நாளைக்குள் அதிமுக அணிகள் இணைந்துவிடும். 4 ஆண்டுகள் ஆட்சி நீடிக்க, மக்கள் அன்பைப் பெற அணிகள் இணைப்பு நடக்கும்." என்று தெரிவித்தார்.
அதிமுக அணிகள் இணைப்பு பற்றி ஒவ்வொருவரும் வெவ்வேறு கருத்துக்களை வெளியிட்டுள்ள நிலையில், அமைச்சர் சீனிவாசன் முடிவும் மாறுமா அல்லது அவர் கூறியது போலவே நாளைக்குள் அணிகள் இணையுமா என்பது நாளை தெரிந்துவிடும்.