100 சதவீதம் பயிர் காப்பீடு தொகை வழங்க வேண்டும்.. அய்யாக்கண்ணு கோரிக்கை
100 சதவீதம் பயிர் காப்பீடு தொகை வழங்க கோரி விவசாயிகள் நடத்தும் போராட்டம் குறித்து தேசிய தென் இந்திய நதிகள் இணைப்பு சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு பேட்டி அளித்துள்ளார்.
நாகப்பட்டினம்: 100 சதவீதம் பயிர் காப்பீடு தொகை வழங்க கோரி விவசாயிகள் நடத்தும் போராட்டம் குறித்து தேசிய தென் இந்திய நதிகள் இணைப்பு சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு பேட்டி அளித்துள்ளார்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கத்திரிபுலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்பு 100 சதவீதம் பயிர் காப்பீடு தொகை வழங்க கோரி விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
கடந்த டிசம்பர் மாதம் 18-ந் தேதி முதல் 16 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். கத்திரிபுலத்தில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை தேசிய தென் இந்திய நதிகள் இணைப்பு சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்து பேசினார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே மத்திய அரசு அமைக்க வேண்டும். இல்லையென்றால் விவசாயிகளை ஒருங்கிணைத்து மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம். வேதாரண்யம் கத்திரிபுலம் விவசாயிகள் 69-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஆனால் பேச்சு வார்த்தை நடத்த இதுவரை யாரும் வரவில்லை. விவசாயிகள் முரண்டு பிடித்தால் சாப்பாடு கிடைக்காது என்பதை அரசு உணர வேண்டும். இன்னும் 15 நாட்களுக்குள் பயிர் காப்பீடு தொகையை வேதாரண்யம் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். இல்லாவிட்டால் தலைமை செயலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.