ஆசிரியர்கள் குழந்தைகளை அரசுப்பள்ளியில் படிக்க வேண்டும் என வற்புறுத்த மாட்டோம்- செங்கோட்டையன்
அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க வேண்டும் என அவர்களை வற்புறுத்த மாட்டோம் என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
சென்னை: அரசுப் பள்ளி ஆசிரியர் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க வேண்டும் என வற்புறுத்த மாட்டோம் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
பள்ளிக் கல்வித்துறையில் அதிரடியான பல மாற்றங்கள் சட்டசபை கூட்டத்தொடரில் அறிவிக்கபடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அம்மாதிரியான எந்த அறிவிப்புகளும் வெளியாகவில்லை. ஆனால் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளியில் தான் படிக்க வைக்க வேண்டும் என்கிற அறிவிப்பு வரும் என அனைவரும் எதிர்பார்த்தார்கள்.
கல்வியாளர்கள் இந்தக் கோரிக்கையை பல ஆண்டுகளாக அரசிடம் கோரி வருகின்றனர். இந்நிலையில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், கோபிச்செட்டிபாளையத்தில் செய்தியாளர்களிடம் கூறும்போது, 'அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க வேண்டும் என வற்புறுத்த மாட்டோம்.
ஆனால் அரசுப் பள்ளிகளில் பல மாற்றங்கள் ஏற்படும்போது ஆசிரியர்கள் தானே அரசுப் பள்ளிகளை நாடுவார்கள்' என கூறியுள்ளார். நீட் தேர்வு குறித்துக் கூறும்போது, தமிழகத்துக்கு நீட் தேர்வு வேண்டாம் என்பதில் மாநில அரசு உறுதியாக இருப்பதாகத் தெரிவித்தார்.