தமிழகத்தில் 356 சட்டப் பிரிவை அமுல்படுத்த மாட்டோம்... தட்டிக்கொடுக்கும் வெங்கய்யா நாயுடு: வீடியோ
தமிழகத்தில் ஒருபோதும் அரசியலமைப்புச் சட்டம் 356ப் பயன்படுத்தி ஜனாதிபதி ஆட்சியைக் கொண்டு வர மாட்டோம் என மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு கூறியுள்ளார்.
சென்னை: தமிழகத்தில் ஒருநாளும் 356 சட்டப் பிரிவை பயன்படுத்தி ஆட்சியைக் கலைக்கும் எண்ணம் இல்லை என மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு திட்டவட்டமாகக் கூறினார்.
தமிழகத்தில் தற்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடந்து வரும் ஆட்சியை மத்திய அரசுதான் மறைமுகமாக நடத்தி வருகிறது என்ற குற்றச்சாட்டு அனைத்துத் தரப்பு மக்களிடம் இருந்தும் வெளிப்பட்டுக்கொண்டு இருக்கிறது.
இதற்கு அவ்வபோது பாஜகவைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை, பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா உள்ளிட்டோர், புறவாசல் வழியாக வர வேண்டிய அவசியம் பாஜகவுக்கு இல்லை என பதில் அளித்து வருகின்றனர்.
இதில் மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் தமிழகம் கலவர பூமியாக மாறும் என்று கூறியுள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, தமிழக ஆட்சி பாஜகவின் கையில் உள்ள பந்து என அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று சென்னையில் நடந்த ஜிஎஸ்டி விளக்கக் கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு, ஜிஎஸ்டியால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என கூறினார்.
அதனையடுத்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வெங்கய்யா நாயுடு, காங்கிரஸ் கட்சி ஜிஎஸ்டி விவகாரத்தில் இரட்டை வேடம் போடுகிறது என்றவர், ஜனாதிபதி தேர்தலுக்குப் பிறகு தமிழகத்தில் ஆட்சியை கலைக்கும் ஏண்ணம் இல்லை. குறிப்பாக 356 சட்டப்பிரிவைப் பயன்படுத்தும் எண்ணம் இல்லை என கூறியுள்ளார்.
ஆனால், மத்திய அரசு சொல்வது ஒன்றாகவும் செய்வது ஒன்றாகவும் இருக்கிறது. நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை அமுல்படுத்த மாட்டோம் என சொல்லி, மக்கள் போராட்டத்தை மாவட்ட நிர்வாகம் வாபஸ் வாங்கியது. ஆனால், வாக்குக் கொடுத்த சில நாட்களுக்குள் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அமுல்படுத்தும் ஒப்பந்தத்தை ஒரு தனியார் கம்பெனிக்கு வழங்கியது குறிப்பிடத்தக்கது.