1987-ல் ஜெ.வை பெங்களூருக்கு விரட்ட சதி நடந்தது.. நாங்கதான் காப்பாற்றினோம்: தினகரனின் அடடே பேட்டி
எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை பெங்களூருக்கு விரட்ட பலர் முயற்சி செய்ததாகவும் தங்களது குடும்பமே அவரை பாதுகாத்ததாகவும் அதிமுக துணைப் பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்
சென்னை: எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு ஜெயலலிதாவை பெங்களூருவுக்கு விரட்ட பலர் முயற்சி செய்ததாகவும் அப்போது தங்களது குடும்பம்தான் அவரை பாதுகாத்தது என்றும் அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
தந்தி டிவியின் கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியில் அதிமுக துணைப்பொதுச் செயலளார் டிடிவி.தினகரன் கலந்துகொண்டார். அப்போது சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வரும் நெகடிவ் விமர்சனங்கள் குறித்து நெறியாளர் பாண்டே கேள்வி எழுப்பினார்.
தவறான விமர்சனங்கள்
அதற்கு பதிலளித்த டிடிவி.தினகரன் தவறான விமர்சனங்கள் தங்கள் மீது வைக்கப்படுவதாக கூறினார். பதில் சொல்ல வேண்டிய விமர்சங்களுக்கு மட்டும் பதில் அளிப்போம் என்றும் தினகரன் தெரிவித்தார்.
அப்ப இருந்தே...
குறிப்பாக அரசியல் விமர்சனங்களுக்கு தான் விளக்கமளித்து வருவதாகவும் அவர் கூறினார். எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு ஜெயலலிதா முழுவதுமாக கட்சிப் பணியை தொடங்கியதிலிருந்தே தங்கள் குடும்பத்தினர் அவருடன் இருந்து வருவதாகவும் தினகரன் தெரிவித்தார்.
பெங்களூருக்கு விரட்ட
மேலும் பல எதிரிகளும் எதிர்கட்சியினரும் ஜெயலலிதாவை பெங்களூருக்கு விரட்ட திட்டமிட்டனர். தமிழகத்தை விட்டு வெளியேற்ற திட்டமிட்டனர். அப்போது நாங்கள் தான் அவருக்கு பாதுகாப்பு அளித்தோம் என்றும் தினகரன் கூறியுள்ளார்.
திவாகரன், நடராஜன்
ஏற்கனவே தஞ்சாவூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், எம்ஜிஆர் காலத்தில் இருந்தே எங்கள் குடும்பம் அதிமுகவை காப்பாற்றியது என தினகரனின் மாமா திவாகரன் கூறியிருந்தார். அதேபோல் தினகரனின் சித்தப்பா நடராசன், நாங்கள்தான் அதிமுகவை காப்பாற்றினோம். என் மனைவிதான் ஜெயலலிதாவை தோளில் சுமந்தார். அதனால் குடும்ப அரசியல் செய்வோம் என பகிரங்கமாக பேசி சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.