ஜெ.வையே எதிர்த்தவங்க நாங்க... நீங்கள் எம்மாத்திரம்.. கண்டன கூட்டத்தில் எகிறிய ஸ்டாலின்
திமுக எம்எல்ஏக்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் எம்.எல்.ஏ.க்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து சின்னப்பா பூங்காவில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி திறப்பு விழாவில் பங்கேற்க இருந்த திமுக எம்.எல்.ஏ.க்கள் பெரியண்ணன் அரசு, ரகுபதி உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டதை கண்டித்து நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் கொந்தளித்தார் மு.க. ஸ்டாலின்.
அப்போது பேசிய ஸ்டாலின், "அரசை விமர்சிக்க ஸ்டாலினுக்கு தகுதியில்லை என்கிறார் முதல்வர். இப்படி சட்டசபையில் என்னை பார்த்து கூறினார் ஜெயலலிதா. இந்த சம்பவத்தின்போது எடப்பாடி பழனிச்சாமியும் சட்டசபையில்தான் இருந்தார். ஆனால், நானோ எனக்கு தகுதியில்லை என்று சொல்ல உங்களுக்கு தகுதியில்லை என்று ஜெயலலிதாவை பார்த்து பதிலடியாக தெரிவித்தேன். ஆனானப்பட்ட ஜெயலலிதாவையே எதிர்த்து கேள்வி கேட்டவர்கள் நாங்கள். நீங்கள் எங்களுக்கு எம்மாத்திரம்." என்று விளாசினார்.
மேலும் அவர் கூறுகையில், "அரசு விழா அழைப்பிதழில் திமுக எம்.ல்.ஏக்கள் பெயர் இல்லை என்றும் எதிர்ப்பை அடுத்து திமுக எம்.எல்.ஏக்கள் பெயர்களுடன் புதிய அழைப்பிதழ் செய்யப்பட்டுள்ளது. திமுக மீது ஏற்பட்ட பயத்தால்தான் திமுக எம்.எல்.ஏக்களை போலீசார் கைது செய்தனர்.
ஏற்கெனவே திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டது தான் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி திட்டம் என்றும் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி திட்டத்துக்கு திமுக அரசில் நிதியும் ஒதுக்கப்பட்டது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விழாவில் திமுக எம்.எல்.ஏக்கள் உண்மையை அம்பலபடுத்தி விடுவார்கள் என்பதால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது" என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.