இந்து தலைவர்கள் 10 பேரை கொல்ல திட்டமிட்ட பக்ரூதீன் குரூப்… ஐவரை கொன்றதாக ஒப்புதல்
மதுரை சுரேஷ், வெள்ளையப்பன், ஆடிட்டர் ரமேஷ் உள்பட இந்து தலைவர்கள் படுகொலை தொடர்பாக தேடப்பட்டு வந்த போலீஸ் பக்ருதீன் சென்னையில் பிடிபட்டார்.
ஆந்திர மாநிலம், புத்தூரில் தலைமறைவாக இருந்த அவரது கூட்டாளிகளை தீவிரவாதிகள் பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் ஆகியோரை நீண்ட துப்பாக்கி சண்டைக்கு பின்னர் காவல்துறையினர் கைது செய்தனர். இதில், வயிற்றில் குண்டு பாய்ந்த பன்னா இஸ்மாயில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கைது செய்யப்பட்ட போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக் ஆகியோர் வேலூரில் ரகசிய இடத்தில் வைத்து சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விசாரணையில் பல பல திடுக்கிடும் தகவல்களை கூறியுள்ளனர். அக்டோபர் 2012ல் அரவிந்தரெட்டி தொடங்கி 10 மாதத்தில் 5 பேரை கொன்றோம் என்றும் ஒரே ஆண்டில் குறைந்தது 10 பேரை கொல்லத் திட்டமிட்டோம் ஆனால் 5 பேரை மட்டுமே கொலை செய்தோம் என்றும் இருவரும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
மதுரை சுரேஷ், வெள்ளையப்பன், ஆடிட்டர் ரமேஷ் உள்பட 5 பேரை நாங்கள்தான் கொன்றோம் என்றும் அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
இந்த கொலைகளை செய்துவிட்டு போலி நபரை போலீசில் சிக்க வைத்ததும் விசாரணையில அம்பலமாகியுள்ளது.
வேலூர் அரவிந்த ரெட்டி, பரமக்குடி முருகன் கொலையில் போலி நபர் கைது செய்யப்பட்டுள்ளது தற்போது அம்பலமாகியுள்ளது.சென்னையில் 2 பேரை கொல்லத் திட்டமிட்ட நிலையில் காவல்துறையிடம் சிக்கியதாக பக்ருதீன் கூறியுள்ளார்.
போலீஸ் விசாரணையில் குற்றவாளிகள் இருவரும் அளித்துள்ள வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.