உதவி செய்பவர்களுக்கு உபத்திரம் வந்ததென்றால் அது எங்கள் குடும்பம் தான்... வருந்தும் ம. நடராஜன்!
உதவி செய்பவர்களுக்கு உபத்திரம் வந்ததென்றால் அது எங்கள் குடும்பத்திற்குத் தான் பொருந்தும் என்று சசிகலாவின் கணவர் ம.நடராஜன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை : மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்காக பல தியாகங்களை செய்திருக்கிறோம், ஆனால் உதவி செய்பவர்களுக்கு உபத்திரம் வந்ததென்றால் அது எங்கள் குடும்பத்திற்குத் தான் பொருந்தும் என்று சசிகலாவின் கணவர் ம. நடராஜன் கூறியுள்ளார்.
தனியார் பண்பலை நிகழ்ச்சி ஒன்றிற்கு ம. நடராஜன் அளித்துள்ள பேட்டியில் அவர் கூறியுள்ளதாவது : ஆர்கே நகர் தேர்தலில் தினகரன் போட்டியிடுவது அவருடைய சொந்த விருப்பம், இது குறித்து எனக்கோ என்னுடைய மனைவிக்கோ தொடர்பு இல்லை. தினகரன் போட்டியிடுவதற்கு சசிகலா அனுமதியளித்தாரா என்பது அவரே சொல்லும் வரை தெரியாது.
வருமான வரி சோதனை நடத்துவது மத்திய அரசுக்கு அதிகாரம் இருக்கிறது சோதனை நடத்துகிறார்கள். ரெய்டு பற்றி நானோ என்னுடைய மனைவியோ கவலைப்படாதவர்கள். ஆனால் இதற்கு முன்னர் இதுபோன்றெல்லாம் நடந்திருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும். பிரதமர் சென்னை வருகிறார், கருணாநிதியை சந்தித்துவிட்டு போகிறார், அதனைத் தொடர்ந்தே ரெய்டு நடக்கிறது என்றால் ஏதோ ஒரு பின்னணி இருக்கத் தான் செய்கிறது என்பது தெளிவாகிறது.
நாங்கள் முடிவு செய்திருந்தால்?
மத்திய அரசின் நிலைப்பாட்டை சொல்லும் தமிழிசை சவுந்தரராஜன் என்ன மத்திய அரசின் பிரதிநிதியா. ஜெயலலிதாவிற்காக நாங்கள் பல தியாகங்களை செய்திருக்கிறோம், நானும் என் மனைவியும் ஒரு கட்டத்தில் முடிவு எடுத்திருந்தால் என்ன ஆகியிருக்கும். நானும் பொறுத்துக் கொண்டேன், அவரும் பொறுத்துக் கொண்டார்.
ஜெ. பலனை தரவில்லை
நாங்களும் விட்டுக்கொடுத்தோம் அவர்களும் விட்டுக் கொடுத்தார். அதை ஆதரிப்பதும் ஆதரிக்காமல் போவதும் அவரின் விருப்பம். ஆனால் அதற்கான பலனை ஜெயலலிதா எங்களுக்கு தரவில்லை என்ற வருத்தம் இருக்கிறது. உதவி செய்பவர்களுக்கு உபத்திரம் வந்த குடும்பம் என்றால் அதற்கு உதாரணம் நாங்கள் தான்.
நான் பொருட்படுத்தியதில்லை
தற்போது ஜெயலலிதாவின் மகள் என்று சொல்லும் அம்ருதா என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி இருக்கிறார். ஆனால் நான் அதை பொருட்படுத்தியதில்லை, என்னிடம் ஏன் பேசுகிறீர்கள். நீங்கள் நேரடியாக ஜெயலலிதாவிடமே பேசிக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டேன்.
நாங்களா மன்னார்குடி மாஃபியா
எங்கள் குடும்பத்தை பற்றி தவறான கருத்துகளை மீடியாக்கள் தான் சொல்கின்றன. என்னுடன் வாருங்கள் தெற்கே போவோம் வெறும் கையோடு போவோம் மக்கள் எப்படி வரவேற்பு அளிக்கிறார்கள் என்பதை பார்த்தே தெரிந்து கொள்ளுங்கள். என்னுடன் ஒரு முக்கியத் தலைவர் எங்கள் ஊருக்கு வந்திருந்தார் அவர் எங்கள் குடும்பத்தினரை பார்த்து, எம்ஏபிஎச்டி படித்தவர்கள், டாக்டர் இருக்கும் உங்கள் குடும்பத்தினரை மன்னார்குடி மாஃபியா என்கிறார்களா என்று சிரித்தார். எங்கள் குடும்பத்தை மட்டுமே மன்னார்குடி மாஃபியா என்று சொல்வது சுப்ரமணியன் சாமி தான் அவர் தான் அதற்கான பதிலையும் சொல்ல வேண்டும் என்று நடராஜன் கூறியுள்ளார்.