ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் பணபலம் வென்றுள்ளது- பாஜக
சென்னை: ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதி மக்களின் தீர்ப்பை மனதார நாங்கள் ஏற்கிறோம் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும்பணி இன்று காலையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 23 சுற்றுக்கள் வாக்குகள் எண்ணப்படும். இதுவரை எண்ணப்பட்டுள்ள சுற்றுக்களில் அதிமுக வேட்பாளர் வளர்மதி 40ஆயிரம் வாக்குகள் வரை முன்னிலையில் இருக்கிறார்.
திமுக வேட்பாளர் ஆனந்த் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். தேர்தலில் களமிறங்கிய பாஜக வேட்பாளர் சுப்ரமணியமும், மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளர் அண்ணாதுரையும் பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
வென்ற பணபலம்
இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் ஒவ்வொரு சுற்றாக அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் அதிமுக பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்று வருகிறது. இது குறித்து கருத்து கூறியுள்ள தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் பணபலம் வென்றுள்ளது என்றார்.
மக்களின் தீர்ப்பு
ஸ்ரீரங்கம் தொகுதி மக்கள் அளித்த தீர்ப்பினை மனதார ஏற்றுக்கொள்கிறோம் என்று கூறிய அவர், இது ஊழலுக்கு எதிரான போர்க்களம். எதிர்கட்சியினர் ஒற்றுமையோடு இருந்திருந்தால் வென்றிருக்க முடியும் என்றார்.
ஒற்றுமையில்லை
எங்களுக்கு எத்தனை வாக்குகள் கிடைத்திருக்கிறதோ அவை ஊழலுக்கு எதிராக பதிவான வாக்குகள். ஊழலுக்கு எதிரான போரில் எதிர்கட்சிகளிடையே ஒற்றுமையில்லை என்றும் தமிழிசை குற்றம் சாட்டினார்.
மக்களுக்கு உணர்த்தினோம்
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் ஊழலுக்கு எதிரான போர், நாங்கள் ஊழலுக்கு எதிரான போர்க்களத்தில் நிற்கிறோம் என்பதை மக்களுக்கு உணர்த்தவே போட்டியிட்டோம்.
கவலையில்லை
தோல்வியைப் பற்றி எங்களுக்கு கவலையில்லை. இடைத்தேர்தல் முடிவுகள் எப்படியிருக்கும் என்பதை தெரிந்தேதான் களமிறங்கினோம். நாங்கள் இடைத்தேர்தலில் போட்டியிட்டதே எங்களுக்கு கிடைத்த வெற்றி.