காவிரி: தொடர்ந்து மவுனம் காத்தால்.. மோடி வீட்டை முற்றுகையிடுவோம்.. பி.ஆர். பாண்டியன் எச்சரிக்கை
சென்னை: காவிரி பிரச்சனையில் பிரதமர் தொடர்ந்து மவுனம் காத்தால் பிரதமர் இல்லம் முன் போராட்டம் நடத்துவோம் என்று அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர தயங்குமேயானால், விவசாயிகள் ஒன்று சேர்ந்து சதானந்த கவுடா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளரிடம் பேசிய அவர், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் பிரதமர் காலம் தாழ்த்தாமல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார். காவிரி விவகாரத்தில் பிரதமர் இனியும் தொடர்ந்து மவுனமாகவே இருந்தால் அனைத்து கட்சி தலைவர்களுடன் விவசாயிகள் சென்று, அவர் வீட்டு முன் போராட்டம் நடத்துவார்கள் என்றும் பி.ஆர்.பாண்டியன் கூறினார்.
நீர் பாசன அமைச்சர் மற்றும் ஆணையத் தலைவருக்கு மிரட்டல் விடுத்த சதானந்த கவுடாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் கூறினார். அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்படும் சதானந்த கவுடா, தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்றும் பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.
தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர தயங்குமேயானால், விவசாயிகள் ஒன்று சேர்ந்து சதானந்த கவுடா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம் என்றார். உச்சநீதிமன்ற தீர்ப்பு படி வரும் 27ம் தேதி வரை காவிரியில் வினாடிக்கு 6,000 கனஅடி நீர் திறக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இப்பிரச்சனையில் கர்நாடகாவின் முடிவு உச்சநீதிமன்ற தீர்ப்பை கட்டுப்படுத்தாது என்றார்.