தஷ்வந்த் மேல்முறையீடு செய்தாலும் கவலையில்லை: ஹாசினி பெற்றோர் தரப்பு வக்கீல் தடாலடி
Recommended Video
சென்னை: தஷ்வந்த் மேல்முறையீடு செய்தால் எதிர்கொள்வோம் என்று ஹாசினி பெற்றோர் தரப்பு வழக்கறிஞர் கண்ணதாசன் தெரிவித்தார்.
சென்னை, போரூர் சிறுமி ஹாசினியை பலாத்காரம் செய்து, எரித்து கொலை செய்த கொடூரன் தஷ்வந்த்துக்கு செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம், மரண தண்டனையும், பல்வேறு பிரிவுகளில், 46 வருட சிறை தண்டனையும் விதித்து அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.
தீர்ப்புக்கு பிறகு நிருபர்களிடம் பேசிய வழக்கறிஞர் கண்ணதாசன் கூறியதாவது: அனைத்து குற்றவாளிகளுக்கும் மேல்முறையீடு செய்ய சட்டத்தில் வாய்ப்பு உள்ளது. தஷ்வந்த்துக்கும் அந்த வாய்ப்பு உள்ளது. அவர் மேல்முறையீடு செய்தால், அதை எதிர்கொள்ள தயாராக உள்ளோம்.
குற்றச்சாட்டு முழுமையாக நிரூபணம் செய்யப்பட்டு தண்டனை வழங்கப்பட்டு உள்ளது, எனவே மேல்முறையீட்டிலும், நீதியை நிலைநாட்டுவோம். இவ்வாறு வழக்கறிஞர் கண்ணதாசன் தெரிவித்தார்.
தீர்ப்புக்கு முன்பாக, இவர் அளித்த பேட்டியில் கூட இரட்டை ஆயுள் தண்டனைதான் கிடைக்க வாய்ப்புள்ளது என்று தனது யூகத்தை தெரிவித்திருந்தார். ஆனால், குற்றத்தின் கடுமையை கருத்தில் கொண்டு மகிளா நீதிமன்ற நீதிபதி வேல்முருகன், இந்த அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளார்.
தீர்ப்பால் மகிழ்ச்சியடைந்த பொதுமக்கள், நீதிமன்ற வளாகத்திலேயே, நீதியரசர் வேல்முருகன் வாழ்க என வாழ்த்து கோஷங்களை எழுப்பினர்.