ஜெ. மரணம் தொடர்பான விசாரணை கமிஷன் என்னை ஒன்னும் செய்யாது... தினகரனிடம் சசி சொன்ன பகீர் காரணம்
ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை கமிஷனைப் பற்றி தாம் கவலையேபடவில்லை என பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா, டிடிவி தினகரனிடம் திடமாக கூறியுள்ளார்.
சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பான எந்த ஒரு விசாரணை கமிஷனும் என்னை ஒன்றும் செய்துவிடாது என பெங்களூர் சிறையில் தம்மை சந்தித்த டிடிவி தினகரனிடம் சசிகலா திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார். இதற்காக சசிகலா தெரிவித்த காரணங்கள்தான் அதிர வைக்கக் கூடியதாக இருக்கிறது.
அதிமுகவின் ஓபிஎஸ் அணி, திமுகவுடன் கை கோர்த்து கொண்டிருக்கிறது. சட்டசபையில் ஓபிஎஸ் அணிக்காக திமுக முழு வீச்சில் போராடிப் பார்த்தது.
இதில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் சட்டசபை மார்ஷல் சீருடையில் வந்த போலீசாரின் தாக்குதலுக்குள்ளாகினர். இதனிடையே பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை அவரது அக்காள் மகன் டிடிவி தினகரன் சில நாட்களுக்கு முன்னர் சந்தித்து பேசினார்.
விசாரணை கமிஷன்
அப்போது, திமுகவுடன் ஓபிஎஸ் அணி கை கோர்த்து செயல்படும் விவரங்களை சசிகலாவிடம் தினகரன் கூறியுள்ளார். மேலும் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை கமிஷன் அமைக்கப்பட வேண்டும் என்பதில் திமுக மும்முரமாக இருக்கிறது என்ற தகவலையும் சசிகலாவிடம் தினகரன் கூறியுள்ளார்.
நமட்டு சிரிப்பு
ஆனால் சசிகலாவோ, எந்த ஒரு விசாரணை கமிஷனும் நம்மை ஒன்றும் செய்துவிடாது... அதற்கெல்லாம் நான் கவலைப்படப் போவது இல்லை என கூறியிருக்கிறார். ஓபிஎஸ் மற்றும் திமுக இணைந்து இந்த கோரிக்கையை வலியுறுத்தி வருகிறதே என கவலையுடன் தினகரன் கூறி நமட்டு சிரிப்பு சிரித்திருக்கிறார் சசிகலா.
அப்பல்லோவுக்கு நெருக்கடி
அப்போது சசிகலா சொன்ன விளக்கம்தான் தற்போது அவரது உறவினர்களை ஆறுதல்படுத்தி வருகிறதாம். அதாவது ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டால் தம்மை மட்டுமல்ல அப்பல்லோ மருத்துவமனைக்கும்தான் நெருக்கடி வரும்.
நாமும் காப்பாற்றப்படுவோம்
அப்பல்லோ மருத்துவமனையைக் காப்பாற்ற பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் களமிறங்குவர். அதனால் நமக்கு பெரிய அளவில் எந்த நெருக்கடியும் வந்துவிடாது. அவர்கள் இருக்க நமக்கு பயமேன் என அசால்ட்டாக பதில் சொல்ல தினகரன் அமைதியானாராம். இந்த விவரத்தை போயஸ் கார்டனில் உள்ள உறவினர்களிடம் சொல்லி சொல்லி பூரிக்கிறாராம் டிடிவி தினகரன்.