கொங்கு மண்டலத்தில் ஒவ்வொரு தொகுதியிலும் எங்களுக்கு 2 லட்சம் வாக்குகள்: கொ.ம.தே.க
கோவை: கொங்கு மண்டலத்தில் ஒவ்வொரு தொகுதியிலும் கொ.ம.தே.க.வுக்கு 2 லட்சம் வாக்குகள் உள்ளதாக அக்கட்சித் தலைவர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கோவையில் எஸ்.என். அரங்கில் நடைபெற்ற கோவை மாவட்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கலந்து கொண்டு பேசினார்.
நிகழ்ச்சியில் மாநில தலைமை நிலைய செயலாளர் சூரியமூர்த்தி, கோவை மாவட்ட செயலாளர் செந்தில் மயில்சாமி, துணைச் செயலாளர் கார்த்திக், கோம்பக்காடு துரை, மேற்கு மாவட்ட செயலாளர் குழந்தைவேலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்தார் ஈஸ்வரன். அப்போது அவர் கூறியதாவது:-
கொங்கு மண்டலத்தில் அவினாசி - அத்திக்கடவு திட்டம், பாண்டியாறு புன்னம்புழா உள்ளிட்ட பல்வேறு நீர்நிலை திட்டங்களை நிறைவேற்றக் கோரி தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம். அந்த திட்டங்கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.
இதுமட்டுமில்லாமல் கொங்கு மண்டலத்தில் மின்வெட்டு காரணமாக தொழில்கள் பாதிக்கப்பட்டன. தற்போது விசைத்தறி தொழில் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளன. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பிரச்சினைக்கு தீர்வு காண அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. கூட்டணியில் சேர சில கட்சிகள் இன்னும் பேச்சுவார்த்தையில் உள்ளன. அந்த பேச்சுவார்த்தை இன்னும் சில நாட்களில் முடிந்த பின்னால் எங்கள் கூட்டணியில் எத்தனை கட்சிகள் என்பது தெரிந்துவிடும். அதன் பிறகு எங்கள் கட்சி சார்பில் எத்தனை தொகுதிகள்? அதில் எந்தெந்த தொகுதிகள் என்பது முடிவு செய்யப்படும்.
இந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறும் பலமான கூட்டணியாக எங்கள் கூட்டணி உள்ளது. கொங்கு மண்டலத்தில் இருக்கும் ஒவ்வொரு தொகுதியிலும்ம் எங்கள் கட்சிக்கு 2 லட்சம் வாக்குகள் உள்ளன. எங்கள் கட்சிக்கு கிடைக்கும் வாக்கு, நரேந்திர மோடிக்கு இருக்கும் செல்வாக்கு, கூட்டணி பலம் ஆகியவற்றை வைத்து பார்த்தால் கொங்கு மண்டலத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்பது உறுதி.
கோவை நாடாளுமன்ற தொகுதியை எங்கள் கட்சிக்கு கேட்பதற்கு முழு தகுதி இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். கோவை தொகுதி யாரிடத்தில் இருந்தால் வெற்றி சுலபமாக கிடைக்கும்? என்பதை கொண்டு அதுபற்றி கூட்டணியில் முடிவு செய்வோம்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.