குடும்பத்தோடு மன்னார்குடியில் தினகரன் புத்தாண்டு கொண்டாட்டம்.. ஆட்சி பற்றி சூளுரை
ஜெயலலிதாவின் வழியில் புதிய ஆட்சியை அமைப்போம் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
மன்னார்குடி: விரைவில் ஜெயலலிதாவின் வழியில் புதிய ஆட்சியை நாங்கள் அமைப்போம் என்று தெரிவித்துள்ள தினகரன், தன்மீது போடப்பட்டுள்ள வழக்குகளால் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என கூறியுள்ளார்.
புத்தாண்டை குடும்பத்தினருடன் கொண்டாடும் விதமாக மன்னார்குடிக்கு சென்றுள்ள தினகரன் அங்கு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், விரைவில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழியில் புதிய ஆட்சி அமைக்கப்படும் என்று தெரிவித்தார். இன்னும் சில மாதங்களில் பெரிய அரசியல் மாற்றம் வரவுள்ளதாக கூறிய அவர், அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக கூறினார்.
மேலும் சட்டமன்றத்தில் தன்னுடைய பேச்சுகள் பலரின் முகத்திரைகளை கிழிக்கும் விதமாக இருக்கும் எனவும், அது எதனுடன் தொடர்புடையது என தெரிந்துக்கொள்ள கொஞ்சம் பொறுத்திருங்கள் என்றும் தெரிவித்தார்.
தன்னை அடிப்பணிய வைக்கும் விதமாக பல வழக்குகள் தன் மீது போடப்பட்டுள்ளதாக கூறிய தினகரன், அவை எந்த விதத்திலும் தம்மை பாதிக்காது என்று கூறினார். மேலும் அந்த வழக்குகளின் தீர்ப்புகள் தமக்கு சாதகமாக தான் வரும் என்றும் கூறினார்.