தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரும்போது கல்வி தரத்தை உயர்த்துவோம் - பொன். ராதாகிருஷ்ணன்
தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரும்போது கல்வி தரத்தை உயர்த்துவோம் என்று மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சென்னை: இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான கல்வி முறையைக் கொண்டு வருவதற்குத் தான் நாங்கள் முயற்சித்து வருகிறோம் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய பொன். ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்த மாநில அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
75 சதவிகித அரசுப் பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகள் அரசுப் பள்ளியில் படிப்பதில்லை. மக்கள் பிரதிநிதிகள் எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்கள் குழந்தைகள் கட்டாயமாக அரசு பள்ளியில் படித்தாக வேண்டும் என்ற நிலையைக் கொண்டு வரவேண்டும்.
பாஜக ஆட்சி
இந்த மாதிரி அமைப்பைக் கொண்டு வந்தால்தான் அரசுப் பள்ளிகளை நல்ல நிலைக்குக் கொண்டு வர முடியும். தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரும்போது கல்வி தரத்தை உயர்த்துவோம். இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான கல்வி முறைகளைக் கொண்டு வருவதற்குத்தான் நாங்கள் விரும்புகிறோம்.
தமிழில் பாஸ்போர்ட்
இந்தியிலும் பாஸ்போர்ட் என்பது குறித்து பலரும் பலவித கருத்துக்கள் கூறி வருகின்றனர். இந்தியிலும் பாஸ்போர்ட் வருகிறது. தமிழில் கொடுப்பது தவறே கிடையாது. ஆனால் பிற இடங்களுக்குப் போகும்போது எந்தளவிற்குப் புரிதல் இருக்கிறது என்ற தெரியவில்லை. ஆங்கிலமும் எல்லா நாட்டிலும் புரிதல் கிடையாது. எது அதிகளவு புரிதல் இருக்கிறதோ அதனைப் பயன்படுத்துவதில் தவறு கிடையாது.
மீனவர்கள் மீது தாக்குதல்
மீனவர்கள் எல்லை தாண்டி போகும்போது இலங்கை கடற்படையினர் கைது செய்கின்றனர். நாம் ஏற்கனவே ஒப்பந்தம் செய்திருக்கிறோம். எல்லை தாண்டும்போது கைது செய்யப்படுகிற தமிழக மீனவர்கள் எந்தக் காரணத்திற்காகவும் துன்புறுத்தக்கூடாது என்று சொல்லியிருக்கிறோம்.
அரசு நடவடிக்கை
இருதரப்பு பேச்சுவார்த்தை முடுக்கி விடப்பட்டுள்ளது. இரண்டு நாட்டு அமைச்சர்களும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுவிப்பதற்கும், படகுகளை மீட்பதற்கும் இந்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்