கமல் உட்பட பிரச்சனைகளை கையிலெடுப்போருடன் இணைந்து செயல்படுவோம்: அறப்போர் இயக்கம் Exclusive
நடிகர் கமல் உட்பட பிரச்சனைகளை யார் கையிலெடுத்து போராடினாலும் இணைந்து செயல்படுவோம் என அறப்போர் இயக்கம் கூறியுள்ளது.
சென்னை: கமல்ஹாசன் உட்பட பிரச்சனைகளை யார் கையிலெடுத்து போராடினாலும் இணைந்து செயல்படுவோம் என அறப்போர் இயக்கம் தெரிவித்துள்ளது.
தமிழகத்திலும் லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி போராடி வருகிறது அறப்போர் இயக்கம். அரசு நிர்வாகங்களின் ஊழல்களையும் அறப்போர் இயக்கம் அம்பலப்படுத்தி வருகிறது.
அறப்போர் இயக்கத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக அதன் இணை ஒருங்கிணைப்பாளர் காஷீம் பஷீத் நமது ஒன் இந்தியாவுக்கு அளித்த பேட்டி:
பாணி தொடரும்
அறப்போர் இயக்கம் என்பது அரசுக்கு அழுத்தம் கொடுக்கக் கூடிய ஒரு இயக்கம். இந்த பாணியில் தொடர்ந்து நாங்கள் செயல்படுவோம்.
அரசுக்கு அறிக்கைகள்
அரசு மருத்துவமனைகளை ஆய்வு செய்து அது தொடர்பாக அறிக்கைகள் வெளியிட்டிருந்தோம். அரசாங்கத்துக்கும் அனுப்பியிருந்தோம்.
அரசு செயல்படுகிறது
அதேபோல் தமிழகத்தின் நீர்நிலைகள் தொடர்பாக அறிக்கைகளை அரசிசம் கொடுத்து அதனடிப்படையில் வேலை செய்யவும் வைத்திருக்கிறோம். இப்படி தொடர்ச்சியாக ஒரு இயக்கமாக செயல்படுவோம்.
கமலுடன் இணைந்து செயல்படுவோம்
அதேநேரத்தில் அறப்போர் இயக்கம் உடனடியாக ஒரு அரசியல் கட்சியாக மாறாது. நடிகர் கமல்ஹாசன் எங்களுடன் ஆலோசனை நடத்தியிருக்கிறார். எங்களைப் போன்ற பல இயக்கங்களுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டிருக்கிறார்.
கமலுடன் ஆலோசனை
லோக் ஆயுக்தாவை தமிழகத்தில் அமைக்க வேண்டும் என்பது எங்களது முக்கியமான கோரிக்கை. இது தொடர்பாகவும் கமல்ஹாசனுடன் நாங்கள் ஆலோசித்திருக்கிறோம். நடிகர் கமல்ஹாசன் உட்பட யார் ஊழல் எதிர்ப்பு உள்ளிட்ட பிரச்சனைகளை கையிலெடுத்து செயல்பட்டாலும் அவர்களுடன் அறப்போர் இயக்கம் இணைந்து செயல்படும்.
இவ்வாறு காஷீம் பஷீத் கூறினார்.