ஆளுநர் நடவடிக்கை எடுக்காவிட்டால் 2 நாளில் ஜனாதிபதியை சந்திப்போம்- தங்க தமிழ்ச்செல்வன்
தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் இரண்டு நாட்களில் குடியரசுத்தலைவரை சந்திப்போம் என்று தினகரன் ஆதரவு எம்எல்ஏ தங்க தமிழ் செல்வன் கூறியுள்ளார்.
சென்னை: முதல்வர் மீது நம்பிக்கையில்லை என்று கூறி கொடுத்த மனு மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் இரண்டு நாட்களில் குடியரசுத்தலைவரை சந்திப்போம் என்று தினகரன் ஆதரவு எம்எல்ஏ தங்க தமிழ் செல்வன் கூறியுள்ளார்.
அதிமுகவில் முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் இணைப்பிற்குப் பின்னர் அரசியல் ரீதியில் தினமும் பெரிய அளவில் மாற்றங்களை சந்தித்து வருகிறது. இந்த ஆட்சி நீடிக்குமா? நீடிக்காதா? என்ற கேள்வியை எழுப்பி வருகிறது.
இந்த இணைப்பிற்குப் பின்னர் தங்களுக்கு முதல்வர் மீது நம்பிக்கை இல்லை என்றும், அவரையும், துணை முதல்வரையும் ஆட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் கவர்னர் வித்யாசாகரிடம் தனித்தனியாக மனு அளித்தனர்.
இதையடுத்து, இவர்கள் அனைவரையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று தமிழக அரசு கொறடா ராஜேந்திரன், சபாநாயகர் தனபாலுக்கு பரிந்துரை செய்து இருந்தார். இதையடுத்து விளக்கம் கேட்டு இவர்களுக்கு சபாநாயகர் கடிதம் அனுப்பி உள்ளார்.
21 எம்எல்ஏக்கள் ஆதரவு
தினகரனை நேற்று சந்தித்த விருத்தாச்சலம் எம்எல்ஏ கலைச்செல்வனும் தற்போது புதுச்சேரி சென்றுள்ளார். இதனால் தினகரனுக்கு ஆதரவு எம்எல்ஏக்களின் எண்ணிக்கை தற்போது 21 ஆக உயர்ந்துள்ளது. அனைவருமே புதுச்சேரியில் உள்ள சன்வே ஹோட்டலில் தற்போது தங்கியுள்ளனர். ஒரு முடிவு தெரியாமல் இங்கிருந்து வரமாட்டோம் என்று கூறியுள்ளனர்.
ஜனாதிபதியை சந்திப்போம்
இன்று புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய தங்க தமிழ் செல்வன், தங்களின் மனு மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்காவிட்டால் 2 நாட்களில் குடியரசு தலைவரை சந்திப்போம் என்று கூறியுள்ளார்.
தனபால் முதல்வராகலாம்
தனபால் முதல்வராக வேண்டும் என்று திவாகரன் கூறியது தனிப்பட்ட கருத்து. கட்சியின் மூத்த உறுப்பினரான
தனபால் முதல்வராக வரலாம் என்றும் தங்க தமிழ் செல்வன் தெரிவித்துள்ளார்.
மக்களை சந்திக்க முடியலையே
ஆட்சிக்கு எதிராக பன்னீர்செல்வம் அறிவித்த போராட்டத்தை எப்போது நடத்தப்போகிறார்?. தொகுதி மக்களை சந்திக்க முடியாமல் வருத்தத்தோடு நட்சத்திர ஹோட்டலில் தங்கியுள்ளோம் என்றும் தெரிவித்தார்.