தாயகம் திரும்ப விரும்பும் இலங்கைத் தமிழ் அகதிகள்: பலவந்தமாக அழைக்க மாட்டோம் என்கிறார் விக்னேஸ்வரன்
சென்னை: இந்தியாவில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் தாயகம் திரும்ப விரும்புவதாக இலங்கை தமிழ் அகதிகள் மறுவாழ்வு அமைப்பின் நிறுவனர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
ஆனால், இது தொடர்பாக இந்தியா, தமிழக அரசு, இலங்கை ஆகியோரிடயே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
சென்னையில் சில தினங்களுக்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ்நாட்டில் தங்கியுள்ள இலங்கை அகதிகளை, இந்தியா திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இதுபற்றி கருத்து கூறிய சந்திரசேகரன், இலங்கை தமிழர்கள் தங்கள் மண்ணைக் காக்க விரும்புகின்றனர், அகதிகள் என்பதிலிருந்து விடுபட விரும்புகின்றனர் என்றார்.
இலங்கை தமிழர்கள் தாயகம் திரும்புவது குறித்து தான் விக்னேஸ்வரனிடம் கலாந்தோசித்ததாக தெரிவித்த சந்திரசேகரன், இது குறித்து இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பெய்ரிஸ் தனக்கு எழுதியிருந்த கடிதத்தில், மறுகுடியமர்வு விஷயத்தில் இலங்கை தமிழ் அகதிகள் தாங்களாகவே மனமுவந்து தாயகம் திரும்புவது மிக முக்கியமானது என்று கூறியதாக தெரிவித்தார்.
"தெரியாத இடத்தில் வாழ முடிந்தவர்களுக்கு தங்கள் சொந்த மண்ணில் புதிய வாழ்வைத் தொடங்குவது பிரச்சினையாக இருக்கப்போவதில்லை. ஆனால் இந்திய, இலங்கை அரசுகளின் ஆதரவு தேவை" என்றும் சந்திரசேகரன் கூறியுள்ளார்.
இதனிடையே நேற்று இலங்கை திரும்பிய விக்னேஸ்வரன், பிபிசிக்கு அளித்துள்ள சிறப்பு பேட்டியில், இந்தியாவில் அகதிகளாகத் தங்கியுள்ளவர்கள், தாயகம் திரும்ப வேண்டும் என்று மீண்டும் அழைப்பு விடுத்துள்ள போதிலும், தாம் பலவந்தமாக அவர்களை திருப்பி அழைக்கப் போவதில்லை என்றும் கூறியிருக்கிறார்.
"போர்ச்சூழல் காரணமாக தமிழ்நாட்டில் தஞ்சமடைந்துள்ள இலங்கையர்களின் மீள்குடியேற்றத்திற்காக இந்திய, இலங்கை அரசுகளுடன் வடக்கு மாகாணசபையும் இணைந்து செயற்பட வேண்டியுள்ளது. இதுதொடர்பாக, இந்தியாவுடன் வடக்கு மாகாணசபை ஆலோசனை நடத்தி வருகிறது என்றார்.
தமிழ்நாட்டில் தஞ்சமடைந்துள்ள மக்களின் நிலங்கள் சிங்களக் குடியேற்றங்களுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. அதனைத் தடுத்து நிறுத்துவதற்கு அவர்கள் தாயகம் திரும்ப வேண்டியது முக்கியமானது. இருப்பினும் அவர்கள் சொந்த இடங்களுக்கு, நம்பிக்கையோடு திரும்பி வருவதற்குரிய சூழல் உருவாக்கப்பட வேண்டும் என்றார்.
மேலும் அவர்கள் எவரையும் பலாத்காரமாக நாடு திரும்பச் செய்யப் போவதில்லை. அதேநேரம், வடக்கு மாகாணசபை செயற்படத் தொடங்கியதன் பின்னரே, 13 வது திருத்தச்சட்டத்தில் உள்ள பல குறைபாடுகள் தெரியவந்திருக்கிறது.
தமிழ்மக்களின் சார்பில் இலங்கை - இந்திய உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ள இந்திய அரசு, தமிழ் மக்கள் சுயநிர்ணய உரிமையுடன் கூடிய அதிகாரங்களுடன் வாழத்தக்க வகையில் அந்தத் திருத்தச் சட்டத்தில் சில மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு முயற்சிக்க வேண்டும்.
தமிழ்நாட்டுக்கு மேற்கொண்ட பயணம் அரசியல் சார்ந்ததல்ல. அதனால், அங்குள்ள அரசியல்வாதிகளையோ அரசு சார்ந்த அதிகாரிகளையோ நான் சந்திக்கவில்லை" என்றும் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.