நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இலவச பொருட்கள் தர மாட்டோம்... அன்புமணி கறார்!
சென்னை: தமிழகத்தில் பாமக ஆட்சி ஏற்பட்டதும், மக்களுக்கு இலவச பொருட்களைத் தரமாட்டோம், ஆனால் அதற்கு பதில் இலவச கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றை வழங்குவோம் என பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் பாமகவின் முதல்வர் வேட்பாளராக அன்புமணி ராமதாஸ் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சென்னை சேப்பாக்கம் சிவானந்தா சாலையில் உள்ள அண்ணா கலையரங்கத்தில் மகளிர் தொண்டு நிறுவனத்தின் ஆலோசனை கூட்டம் அதன் தலைவர் எம்.ஜி.சாந்தகுமாரி தலைமையில் நடைபெற்றது.
அக்கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளர்களாக பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
அப்போது விழாவில் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:-
பெண் முதலமைச்சர்...
இப்போது ஒரு பெண் முதலமைச்சர் இருந்த போதும் உங்கள்(பெண்கள்) கஷ்டம் அவருக்கு தெரியவில்லை. இந்த 5 ஆண்டு காலத்தில் ஒரே ஒரு சாதாரண நபர் கூட முதலமைச்சரை பார்க்க முடியவில்லை.
முதல் கையெழுத்து...
டாக்டர் ராமதாஸ் 34 ஆண்டுகளாக மதுவுக்கு எதிராக போராடி வருகிறார். டாஸ்மாக் கடைகளை மூடினாலே பாதி பிரச்சினை தீர்ந்துவிடும். பா.ம.க. ஆட்சிக்கு வந்து ஒரு மணி நேரத்தில் போடப்படும் முதல் கையெழுத்து பூரண மதுவிலக்கு தான்.
மது தான் பிரச்சினையே...
இன்று தமிழகத்தின் முதன்மை பிரச்சினை மது தான். 4 வயது குழந்தை முதல், பள்ளி, கல்லூரி மாணவர்கள், பெண்கள் என எல்லாரும் மது குடிக்கும் வீடியோக்கள் வாட்ஸ் அப்பில் வருகிறது. இந்த நிலை தொடர்ந்தால், அடுத்த தலைமுறையே இல்லாத நிலை வந்து விடும்.
பெண்கள் நாட்டின் கண்கள்...
பெண்கள் நாட்டின் கண்கள் அவர்கள் பொக்கிஷமாக பாதுகாக்கப்பட வேண்டும். எனவே, எங்கள் ஆட்சியில் பெண்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் திட்டங்களை கொண்டு வருவோம். பெண்களுக்கு தொழிற்பயிற்சிகள் வழங்குவோம்.
இலவச கல்வி...
இலவச பொருட்கள் கொடுக்க மாட்டோம் அதற்கு பதில் இலவச கல்வி, வேலைவாய்ப்பு வழங்குவோம். உயர்ரக மருத்துவமனைகளில் கிடைக்கும் சிகிச்சை ஏழை எளியவர்களுக்கும் கிடைக்க செய்வோம்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.