குதிரை பேர ஆட்சி கவிழும் வரை மக்களை திரட்டி போராடுவோம் - ஸ்டாலின்
தமிழகத்தை ஆளும் குதிரை பேர ஆட்சி கவிழும் வரை மக்களை திரட்டி போராடுவோம் என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கூறியள்ளார்.
சென்னை: டாக்டராகி விடுவோம் என்ற அனிதாவின் கனவை நீட் தேர்வு நசுக்கி விட்டது என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
திருச்சியில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், அனிதாவிற்கு உரிய கல்வி மறுக்கப்பட்டதால் அவர் உயிர் பறிக்கப்பட்டு விட்டது என்றார்.
மாநில அரசின் உரிமைகள் நசுக்கப்பட்டு கொண்டிருக்கின்றன. 12 ஆண்டுகள் படித்த படிப்பை, 3 மணி நேர தேர்வு திறமையை தீர்மானித்து விடுமா.
தமிழக மாணவர்களின் மருத்துவ கனவு கேள்விக்குறியாகி வருகிறது. நீட் தேர்வில் முதல் இடத்தில் தென் இந்திய மாணவர்கள் யாரும் கிடையாது. முதல் 25 இடங்களில் வட இந்திய மாணவர்களே உள்ளனர்.
முதல் பெண் டாக்டரை கொடுத்த தமிழகத்திற்கு நீட் வேண்டாம் என்று கூறுகிறோம். நீட் தேர்வுதான் அனிதாவின் உயிர் போக காரணமாக அமைந்து விட்டது.
தமிழக காவல்துறை கண்டன பொதுக்கூட்டத்திற்கு தடை விதிக்க திட்டமிட்டது. காவல்துறையின் சதித்திட்டத்தை முறியடித்து விட்டுத்தான் இங்கே பிரம்மாண்ட கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
நீட் தேர்வு மசோதா ஜனாதிபதிக்கே சென்று சேரவில்லை. இதற்கு பாஜகவினர் விளக்கம் அளிப்பார்களா? நீட் தேர்வுக்கு ஓராண்டுக்கு விலக்கு தருவோம் என்று கூறி நம்ப வைத்து கழுத்தறுத்த பாஜக பதில் சொல்ல வேண்டும்.
அவசர சட்டம் கொண்டு வரலாம் என்று உச்சநீதிமன்றத்தில் கூறி விட்டு பின்னர் பல்டியடித்ததே மத்திய அரசு. அது என்னவாயிற்கு இதற்கு திராணியிருந்தால் பதில் சொல்ல வேண்டும்.
கறுப்பு பணம் மீட்பு, மீனவர்கள் பாதுகாப்பு ஆகியவற்றிக்கு என்ன நடவடிக்கை எடுத்துள்ளோம் என்று பாஜக பதில் சொல்ல வேண்டும். தமிழகத்தில் இருந்து போய் டெல்லியில் போய் விவசாயிகள் போராடி வருகின்றனர். ஆனால் மோடி ஒருமுறை கூட சந்தித்ததில்லை.
யார் யாரையோ மோடி சந்திக்கிறார். எதிர்கட்சியினரை மட்டும் சந்திக்கவில்லை. இது ஏன் என்று தெரியவில்லை.
செப்டம்பர் 10ஆம் தேதி ஆளுநரை சந்தித்து எடப்பாடி பழனிச்சாமி அரசை அகற்ற வலியுறுத்தப் போகிறார். அதுதான் கடைசி. ஆளுநர் நடவடிக்கை எடுக்காவிட்டால் நாங்கள் மக்களை திரட்டி குதிரை பேர அரசு அகலும் வரை போராடுவோம் என்று ஸ்டாலின் கூறினார்.