விட மாட்டோம்... நிச்சயம் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவோம்.. தம்பிதுரை சூளுரை!
ஜிஎஸ்டியில் உள்ள பாதகங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவோம் என அதிமுக எம்பி தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
சென்னை: ஜிஎஸ்டியில் உள்ள பாதகங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவோம் என அதிமுக எம்பி தம்பிதுரை தெரிவித்துள்ளார். ஜிஎஸ்டி தொழில் அதிபர்கள், பணக்காரர்களுக்கு ஆதரவாக இருந்தால் ஏற்கமாட்டோம் என்றும் தம்பிதுரை கூறியுள்ளார்.
ஒரே நாடு ஒரே வரி என்ற கொள்கையில் கடந்த ஒன்றாம் தேதி முதல் ஜிஎஸ்டி சட்டத்தை மத்திய அரசு நாடு முழுவதும் அமல் படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மத்திய அரசின் இந்த புதிய சட்டத்துக்கு எதிராக பட்டாசு மற்றும் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் நான்காவது நாளாக போராட்டத்ல் ஈடுபட்டுள்ளனர். திரையரங்குகளும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வரி வருவாய் இழப்பு
இந்நிலையில் லோக்சபா துணை சபாநாயகரும் அதிமுக எம்பியுமான தம்பிதுரை சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ஜிஎஸ்டி வரியால் மாநிலங்களுக்கு வரி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
மத்திய அரசு ஈடுகட்ட வேண்டும்
ஜிஎஸ்டியால் மாநில அரசுகளுக்கு ஏற்படும் இழப்பை மத்திய அரசு தொடர்ந்து ஈடுகட்ட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். ஜிஎஸ்டி பணக்காரர்கள், தொழில் அதிபர்களுக்கு ஆதரவாக இருந்தால் ஏற்கமாட்டோம் என்றும் அவர் தெரிவித்தார்.
அதிமுக குரல் கொடுக்கும்
ஜெயலலிதாவின் கோரிக்கைக்கு செவிசாய்த்து மத்திய அரசு ஜிஎஸ்டியில் சில திருத்தங்களை செய்தது என்று கூறிய தம்பிதுரை அதனாலேயே ஜிஎஸ்டியை ஆதரித்தோம் என்றார். ஜிஎஸ்டியால் மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்படுகிறது என்பது உண்மைதான் என்ற அவர் ஜிஎஸ்டியால் பாதிப்பு ஏற்பட்டால் நாடாளுமன்றத்தில் அதிமுக குரல் கொடுக்கும் என்றார்.
நாடாளுமன்றத்தில் கேள்வி
ஜிஎஸ்டியில் உள்ள பாதகங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவோம் என்றும் தம்பிதுரை உறுதிபடத் தெரிவித்தார். மேலும்
ராம்நாத் கோவிந்த் நல்லவர் என்ற அடிப்படையிலேயே அவருக்கு குடியரசுத்தலைவர் தேர்தலில் ஆதரவு அளித்ததாகவும் தம்பிதுரை கூறினார்.