மீண்டும் இடைத்தேர்தல் வந்தால் அதையும் சந்திப்போம்.. பயப்படமாட்டோம் : தங்கத் தமிழ்ச்செல்வன் பேச்சு
மீண்டும் இடைத்தேர்தல் வந்தால் அதையும் சந்திக்கத் தயார் என்று தங்கத் தமிழ்ச்செல்வன் குறிப்பிட்டு உள்ளார்.
தேனி : நீதிமன்றமும் சட்டசபை உறுப்பினர்கள் நீக்கம் செல்லும் என்று தீர்ப்பளித்தால், அடுத்து வரும் இடைத்தேர்தலையும் சந்திப்போம். எதிரணியினரைப் போல பயந்துகொண்டு இருக்கமாட்டோம் என்று தங்கத் தமிழ்ச்செல்வன் பேசி உள்ளார்.
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா அதிமுக சார்பில் மாவட்டம்தோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதற்கு போட்டியாக டி.டி.வி தினகரன் அணியினரும் பல இடங்களில் கூட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், எம்.ஜி.ஆரின் 101வது பிறந்த நாளை முன்னிட்டு தேனிமாவட்டத்தில் உள்ள கூடலூரில் டி.டி.வி தினகரன் அணி சார்பாக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு டி.டி.வி தினகரனின் தீவிர ஆதரவாளர் தங்கத்தமிழ்ச்செல்வன் கலந்து கொண்டார்.
அதிமுகவை கைப்பற்றுவோம்
வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க அம்மா அணி என்ற பெயரில் சின்னம் வாங்கி அதில் தமிழகம் முழுவதும் போட்டியிட தயாராக இருக்கிறோம். நீதிமன்றத்திலும் அதற்கான அனுமதி கேட்டுள்ளோம். அதற்கான பணிகளில் டி.டி.வி தினகரன் ஈடுபட்டு வருகிறார். தேர்தலில் அ.தி.மு.க அம்மா அணி அமோக வெற்றி பெறுவதின் மூலம் அ.தி.மு.க. கட்சியை கைப்பற்றுவோம். தி.மு.க.விலிருந்து எம்.ஜி.ஆர். விலகியபோது ஐந்து சட்டசபை உறுப்பினர்கள் மட்டுமே எம்.ஜி.ஆருக்கு ஆதரவாக வந்தனரே தவிர மற்ற எம்எல்ஏக்கள் தி.மு.க. பக்கம் போய்விட்டனர்.
மக்கள் செல்வாக்கு தினகரனுக்கே
ஆனால் 1972ல் கட்சி தொடங்கிய எம்.ஜி.ஆர் 1973ம் ஆண்டு திண்டுக்கல்லில் நடந்த இடைத்தேர்தலின் மூலம் அமோக வெற்றி பெற்று ஒரு மாபெரும் இயக்கமாக, மக்கள் செல்வாக்குடன் அ.தி.மு.க.வை பலம் வாய்ந்த கட்சியாக மாற்றிக் காட்டினார். அதுபோல் டி.டி.வி. தினகரனும் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் மக்கள் செல்வாக்குடன் வெற்றி பெற்று இருக்கிறார். கூடிய விரைவில் எம்.ஜி.ஆர். போல் தேர்தலில் வெற்றி பெற்று தமிழக முதல்வராகவும் வலம் வருவார்.
இடைத்தேர்தலை சந்திக்கத் தயார்
18 எம்.எல்.ஏ.க்கள் நீக்கப்பட்டதற்கு நீதிமன்றத்தில் சாதகமான தீர்ப்பு வரவில்லை என்றால் அதில் மேல்முறையீடு செய்யமாட்டோம். மாறாக மக்களிடம் சென்று நீதி கேட்போம். இடைத்தேர்தலை சந்தித்து அதில் ஆர்.கே.நகர் போல் அந்த பதினெட்டு எம்.எல்.ஏ.க்களும் உறுதியாக வெற்றி பெறுவோம். 18 எம்.எல்.ஏ.க்கள் நீக்கப்பட்டால், ஓ.பி.எஸ் எதிர்பு தெரிவித்தபோது அவருக்கு ஆதரவு அளித்த பதினோரு எம்.எல்.ஏ.க்களும் நீக்கப்பட வேண்டும் . இரண்டுக்கும் ஒரே விதி தான். அப்படிப்பட்ட சூழலில் இடைத்தேர்தல் வந்தால் பயப்படாமல் சந்திக்கத் தயாராக உள்ளோம்.
துணை முதல்வர் பதவி பறிபோகும்
மேலும், 11 எம்.எல்.ஏ.க்கள் நீக்கப்பட்டால், ஓ.பன்னீர் செல்வத்தின் அமைச்சர் பதவியும் பறிபோகும். இதற்கு நீதிமன்றம் போக தேவையில்லை சாதாரண மக்களிடம் கேட்டால் கூட அவர்களே நியாயத்தை சொல்லுவார்கள். கட்சியை உடைத்த ஓ.பி.எஸ்க்கு துணை முதல்வர் பதவி கொடுத்தது சரியா? இந்த அரசு அதிகார பலத்தால் செயல்பட்டு வருகிறது ஆனால், மக்கள் பலம் டி.டி.வி தினகரனிடம் தான் உள்ளது என்று தங்கத் தமிழ்ச்செல்வன் குறிப்பிட்டு உள்ளார்.