ஓ.பி.எஸ். எப்போது வந்தாலும் பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளோம்: சி.வி.சண்முகம்
அதிமுகவின் இரு அணிகளும் இணையவதற்கு பேச்சுவார்த்தை நடத்த ஓபிஎஸ் எப்போது வந்தாலும் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளோம் என அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.
சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் எப்போது வந்தாலும் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளோம் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் இரு அணிகளும் மீண்டும் இணையப் போவதாக பல்வேறு தகவல் வெளியான நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் இன்று அவசர ஆலோசனையில் ஈடுபட்டனர். இதனையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இல்லத்திலும் இன்று இரவு மிக முக்கியமான ஆலோசனை நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி, வெல்லமண்டி நடராஜன், சி.வி.சண்முகம், செங்கோட்டையன், ராஜேந்திர பாலாஜி மற்றும் வைத்திலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது அமைச்சர் ஜெயக்குமார், ஆலோசனைக் கூட்டம் பற்றி விளக்கினார். இதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம், ஓ.பன்னீர்செல்வம் எப்போது வந்தாலும் நாங்கள் பேசத் தயாராக உள்ளோம் என்றும், எம்.எல்.ஏ., வெற்றிவேல் கூறுவது கட்சியின் அதிகாரப்பூர்வ கருத்து இல்லை என்றும் தெரிவித்தார்.
மேலும், கட்சியை காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவே தினகரனுக்கு எதிராக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், அனைவரின் ஒட்டுமொத்த முடிவைதான் ஜெயக்குமார் கூறினார் என்றும் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கூறியுள்ளார்.