லோக்சபா தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெல்ல உறுதி ஏற்போம்- ஜெ.
சென்னை: லோக்சபா தேர்தலில் 40 தொகுதிகளில் வெற்றி பெற உறுதி ஏற்போம் தொண்டர்களை அதிமுக பொதுச்செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா கேட்டுக்கொண்டுள்ளார்
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஏற்காடு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில், 78,116 வாக்குகள் வித்தியாசத்தில் கழக வேட்பாளர் சரோஜா வெற்றி பெற்றுள்ளார் என்ற செய்தி எனக்கும், கழக உடன்பிறப்புகளுக்கும், கழகத்தின்பால் அன்பு கொண்ட அனைவருக்கும் எல்லையில்லா மகிழ்ச்சியைத் தருகிறது.
கழகத்தின் வெற்றிச் சின்னமாம் ‘இரட்டை இலை' சின்னத்திற்கு வாக்களிக்குமாறு ஏற்காடு தொகுதி வாக்காளப் பெருமக்களை நான் நேரில் சந்தித்து ஆதரவு கேட்ட போது, அவர்கள் காட்டிய இன்முகத்தையும், இனிய வரவேற்பையும் பார்த்த பொழுதே இந்த வெற்றியை நாம் பெறப் போவது உறுதி என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டது.
என் மீது இவ்வளவு அன்பு கொண்டு, தங்கள் அன்புச்சகோதரியாம் என்னுடைய வேண்டுகோளை ஏற்று, ‘இரட்டை இலை' சின்னத்திற்கு பெருவாரியாக வாக்களித்து இருக்கும் எனதருமை ஏற்காடு தொகுதி வாக்காளப் பெருமக்களுக்கு முதற்கண் என் நெஞ்சார்ந்த நன்றியை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
எம்.ஜி.ஆர். தமிழ்நாட்டிற்கு தந்திட்ட இயக்கமான அ.தி.மு.க. முன்னேற்றக்கழகம் தான் எப்பொழுதுமே தமிழக மக்களின் முழு அன்பைப் பெற்ற மாபெரும் அரசியல் சக்தி என்பது இந்த வெற்றியால் மேலும் உறுதிபட்டிருக்கிறது. ஏற்காடு தொகுதி இடைத்தேர்தலில் அரும்பணியாற்றி, அ.தி.மு.க. வெற்றிப் பாதையில் நடைபோட, அல்லும் பகலும் அயராது உழைத்த தலைமைக் கழக நிர்வாகிகளுக்கும், அமைச்சர் பெருமக்களுக்கும், கழகத்தில் பல்வேறு நிலைகளில் பொறுப்பு வகிக்கும் நிர்வாகிகளுக்கும், என் உயிரினும் மேலான கழக உடன்பிறப்புகளுக்கும் எனது பாராட்டினையும், நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த இடைத்தேர்தலில் பணியாற்றிய தோழமைக் கட்சிகளின் தலைவர்கள், தொண்டர்கள் மற்றும் நல்லெண்ணம் கொண்ட நடுநிலையாளர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்த சில மாதங்களில் நடைபெற இருக்கும் நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தலிலும் இதேபோல் சிறப்பாகப் பணியாற்றி, ‘அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க. வென்றது' என்ற நிலை உருவாக உழைப்போம் என்று இந்த நாளில் உறுதி ஏற்போம்.
நம்முடைய உழைப்பும், வெற்றியும் தமிழ் சமூகத்திற்கு அர்ப்பணிக்கப்படுகிறது. தமிழர்கள் எங்கிருந்தாலும் அவர்கள் ஏற்றம் பெற வேண்டும்; அவர்கள் வாழ்வு மகிழ்ச்சிக்குரிய வாழ்வாக அமைந்திட வேண்டும்; எல்லோரும் எல்லாமும் பெறுகின்ற சமத்துவ சமூகம் உருவாகிட வேண்டும் என்பதற்காகத் தான் எண்ணற்ற தியாகங்களை நாம் மேற்கொண்டு அரசியல் பணியில், மக்கள் தொண்டில் முழுமையாக ஈடுபட்டிருக்கிறோம்.
நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தலில் ஒரு முழுமையான வெற்றியை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் பெற்றால் மட்டுமே அகில இந்திய அளவில் சிறந்த ஆட்சியும், நிர்வாகமும் நடைபெறுவதற்கு நம்முடைய பங்களிப்பை நாம் ஆற்ற முடியும் என்பதால் தான், ஏற்காடு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் முடிவைப் போலவே எதிர்வரும் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலிலும் நம்முடைய வெற்றி அமைந்திட வேண்டும் என்று நான் பெரிதும் விரும்புகிறேன்.
ஏற்காடு தொகுதி வாழ் வாக்காளப் பெருமக்களுக்கு மீண்டும் என் நன்றியை தெரிவித்துக் கொள்வதோடு, அயராது உழைத்திட்ட அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளை தெரிவித்து மகிழ்கிறேன் என்று தனது அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.