டெல்லியில் வெற்றி அல்லது வீரமரணம்... - அய்யாக்கண்ணு எக்ஸ்க்ளுசீவ் - வீடியோ
எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றாப்படாவிட்டால் டெல்லியில் இருந்து உயிரோடு திரும்பமாட்டோம் என அய்யாக்கண்ணு எச்சரித்துள்ளார்.
சென்னை: டெல்லியில் 300 விவசாய சங்கங்களை இணைத்து மீண்டும் போராட்டம் நடத்துவோம். அரசு எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றும்வரை போராடுவோம் அல்லது பிணமாகத் திரும்பி வருவோம் என தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு ஒன் இந்தியாவுக்கு அளித்துள்ள சிறப்புப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த ஆண்டு பருவமழை பொய்த்துவிட்டதால், கடும் வறட்சியின் காரணமாக பயிர்கள் கருகிவிட்டன. அதற்கு நஷ்ட ஈடு வேண்டும், நதிகளை இணைக்க வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் டெல்லியில் 41 நாட்கள் தொடர்ந்து போராடி வந்தனர். ஆனால், இறுதிவரை பிரதமர் மோடி விவசாயிகளை சந்தித்து கோரிக்கைகளை கேட்கவில்லை.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விவசாயிகளை சந்தித்து, கோரிக்கைகளை நிறைவேற்ற ஆவண செய்வேன் என வாக்குறுதி கொடுத்ததையடுத்து விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்று தமிழகம் திரும்பினர். அதன்பிறகு முதலமைச்சரை சந்தித்து, வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்ய கோரிக்கை விடுத்தனர். ஆனால் அவர்களது கோரிக்கை முழுமையாக நிறைவேற்றப்படவில்லை.
இதனை தொடர்ந்து மீண்டும் டெல்லியில் போராட முடிவு செய்துள்ள நிலையில் அய்யாக்கண்ணு ஒன் இந்தியாவுக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் கூறியிருப்பதாவது: மழை பெய்யாத காரணத்தால் பயிரிட்ட பயிர்கள் அனைத்தும் கருகி போய்விட்டது. ஆனால் கருகிய பயிருக்கு நஷ்ட ஈடு கேட்டு போராட்டம் நடத்தினோம். ஆனால் மத்திய, மாநில அரசுகள் அதற்கு செவி சாய்க்கவில்லை.
தனிநபரின் பயிர்கள் அழிந்துபோனால் அதற்கு இன்ஸ்சூரன்ஸ் கொடுக்க வேண்டும். ஆனால் அரசு அதுகுறித்து யோசிப்பது இல்லை. வறட்சி நிவாரணமாக மாநில அரசு 21, 778 கோடி ரூபாய் மத்திய அரசிடம் கேட்டது. ஆனால் மத்திய அரசு ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை.
ஆனால், அடுத்த வருடம் சாகுபடி செய்யும் பயிருக்கு இப்போதே இடுபொருள் மானியம் கொடுத்துள்ளது. வறட்சி நிவாரணம் கேட்டால், அடுத்த வருட சாகுபடியைப் போய் பார் என்கிறது அரசு. ஆகையால் நாங்கள் இந்தியா முழுவதும் உள்ள 300 விவசாய சங்கங்களை ஒருங்கிணைத்து மீண்டும் டெல்லியில் போராட உள்ளோம். எங்களது கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும். அல்லது வீர மரணமடைந்துதான் தமிழகம் திரும்புவோம்'' இவ்வாறு அய்யாக்கண்ணு கூறினார்.