கூர்க் விடுதிக்கு காவல் துறையை அனுப்பியவர்கள் மீது சட்டபடி நடவடிக்கை- தினகரன்
கூர்க் விடுதிக்கு காவல் துறையை அனுப்பியவர்கள் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தினகரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கூர்க்: கூர்க் விடுதியில் தங்கியுள்ள எம்எல்ஏக்களை போலீஸை ஏவி விட்டு மிரட்டுபவர்களை சட்டபடி சந்திப்போம் என்று தினகரன் தெரிவித்தார்.
தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 20 பேர் கர்நாடக மாநிலத்தில் உள்ள கூர்க் பகுதியில் உள்ள பன்டிக்டன் ரிசார்ட்டில் தங்கியுள்ளனர். நேற்றைய தினம் இந்த எம்எல்ஏக்கள் தினகரனால் அடைத்து வைக்கப்பட்டதாக தமிழக போலீஸார் விடுதியில் சோதனை மேற்கொண்டு எம்எல்ஏக்களிடம் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் எம்எல்ஏக்கள் தங்கியுள்ளது குறித்து தங்களுக்கு தகவல் தெரிவிக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பி கூர்க் காவல் துறை விடுதி உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
இதுகுறித்து சென்னை அடையாறில் தினகரன் கூறுகையில், கூர்க் விடுதிக்கு காவல் துறையை அனுப்பியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். ஆட்சியை காப்பாற்றி கொள்ள எடப்பாடி முயற்சிக்கிறார்.
முதல்வர் பழனிச்சாமிக்கு ஆதரவு அளிக்கும் படி காவல் துறையை ஏவி மிரட்டல் விடுத்துள்ளனர். தங்களுக்கு பல கோடி பேரம் பேசுவதாக எங்கள் ஆதரவு எம்எல்ஏக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
ஸ்லீப்பர் செல்கள் எத்தனை பேர் உள்ளனர் என்பது குறித்து இப்போது கூறமுடியாது. கோரிக்கை மனு அளித்தபோது 14-ஆம் தேதி முடிவு எடுப்பதாக ஆளுநர் கூறியுள்ளார்.
கட்சி விதிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட கூட்டம் எப்படி பொது கூட்டமாகும்.
நேற்றைய தீர்மானங்கள் செல்லுமா என்பதை உயர்நீதிமனறம் எடுக்கும். கூட்டத்தில் பங்கேற்றவர்கள் பொதுக் குழு உறுப்பினர்கள் இல்லை. கட்சியைக் காப்பாற்ற எந்த எல்லைக்கும் செல்ல தயார் என்றார் அவர்.