இப்போது எங்கள் முடிவை சொல்ல மாட்டோம்.. கருணாஸ் உள்ளிட்ட அதிமுக கூட்டணி எம்எல்ஏக்கள் கூட்டறிக்கை
சென்னை: இப்போதைக்கு சொல்ல மாட்டோம், உரிய நேரம் வந்த பிறகுதான் முடிவை சொல்வோம் என அதிமுக கூட்டணி எம்எல்ஏக்கள் கூறியுள்ளனர்.
புதுவை ரிசார்ட்டில் 19 எம்.எல்.ஏக்களுக்காக 30 அறைகள் புக்கிங் செய்யப்பட்டுள்ள நிலையில், அதிமுக கூட்டணி கட்சி எம்எல்ஏக்களான கருணாஸ் உள்ளிட்டோரின் ஆதரவு யாருக்கு என்பதில் இழுபறி நீடித்து வருகிறது.
இந்த நிலையில் யாருக்கு ஆதரவு என்பது பற்றி உரியநேரத்தில் நல்ல முடிவு எடுப்போம் என எம்.எல்ஏக்கள் கருணாஸ், தனியரசு,தமீமுன்அன்சாரி கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அதிமுகவில் ஏற்பட்டுள்ள குழப்பத்திற்கு மத்திய அரசின் வரம்பு மீறிய தலையீடே காரணம் என்று அந்த அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. தமிழக அரசியல் சூழ்நிலையை பொறுத்து தங்கள் முடிவை அறிவிக்க உள்ளதாக இம்மூவரும் கூறியுள்ளனர்.
இதில் தமிமுன் அன்சாரியை தவிர்த்து மற்ற இருவரையும் தங்கள் பக்கம் ஈர்த்துவிடலாம் என்று எடப்பாடி பழனிச்சாமி கருதுவதாக கூறப்படுகிறது. பாஜகவுடன் நெருக்கம் காட்டுவதால் தமிமுன் அன்சாரி, எடப்பாடி பழனிச்சாமி அணியிலிருந்து வெளியே இருப்பதையே விரும்புவார் என கூறப்படுகிறது.