விவசாய விளைநிலங்கள் வழியே கெயில் குழாய்கள் பதிப்பதை தடுப்போம்.. வேல்முருகன்
சென்னை: தமிழகத்தில் உள்ள விவசாய விளைநிலங்கள் வழியே கெயில் எரிவாயுக் குழாய்கள் பதிப்பதைத் தடுத்து நிறுத்துவோம் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
தமிழகத்தின் ஒட்டுமொத்த எதிர்ப்பை கருத்தில் கொள்ளாமல் விவசாய விளைநிலங்கள் வழியே கெயில் நிறுவனத்தின் எரிவாயு குழாய்களைப் பதிக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது மிகுந்த அதிர்ச்சிக்குரியதாகும்.
தமிழக அரசும் தமிழக எதிர்க்கட்சிகளும் ஒட்டுமொத்தமாக விளைநிலங்கள் வழியே கெயில் எரிவாயு குழாய்களை அமைக்கக் கூடாது என திட்டவட்டமாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஆனால் இதற்கு எதிராக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் வாதாடி தங்களுக்கு சாதகமான தீர்ப்பைப் பெற்றுள்ளது.
தமிழகத்தின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் உச்சநீதிமன்றம் மூலமாக மத்திய அரசு உத்தரவைப் பெற்றிருப்பது தமிழகத்துக்கு இழைக்கப்படும் அநீதியும் துரோகமுமாகும்.
தமிழக மேற்கு மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சர்வநாசமாக்கும் இந்த நாசகார எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்துக்கு சாதகமான தீர்ப்புக்கு எதிராக அரசியலமைப்பு சாசன அமர்விடம் தமிழக அரசு உடனே மேல்முறையீடு செய்ய வேண்டும்.
தமிழக விவசாயிகளுக்கு பாதிப்பில்லாத வகையில்தான் கெயில் எரிவாயு குழாய்கள் பதிக்கப்பட வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
இதனையும் மீறி தீர்ப்புகளைக் காட்டி இத்தகைய படுபாதக கெயில் எரிவாயு குழாய்களை விளைநிலங்கள் வழியே பதிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால் விவசாய பெருங்குடிமக்களை ஒன்றுதிரட்டி அதைத் தடுக்கும் நடவடிக்கையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி இறங்கும் எனத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று அவர் கூறியுள்ளார்.