சட்டசபை தேர்தலில் திமுகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது: கருணாநிதி
சென்னை: சட்டசபை தேர்தலில் திமுகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று திமுக தலைவர் கருணாநிதி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில் 232 தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு காலை முதலே விறுவிறுப்பான வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. திமுக தலைவர் கருணாநிதி சென்னை கோபாலபுரத்தில் வாக்களித்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு கருணாநிதி கூறிய பதில்கள்:
செய்தியாளர் : தி.மு.க. வின் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?
கருணாநிதி: தி.மு. கழகத்தின் வெற்றி வாய்ப்பு ஒளி மயமாக உள்ளது. பிரகாசமாக உள்ளது.
செய்தியாளர் : தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் எப்படி?
கருணாநிதி: சிலவற்றில் எங்களுக்குப் பிடிக்காத செயல்பாடு.
செய்தியாளர் : இந்த முறை பல இடங்களில் பணம் பிடிபட்டிருக்கிறது. பல இடங்களில் பணம் பட்டுவாடா செய்யப்பட்டிருக்கிறது. கன்டெய்னர் மூலம் கடத்தப்பட்ட பணம் பிடிபட்டிருக்கிறது. இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
கருணாநிதி: தமிழ்நாட்டையே விலை கூறுகின்ற வகையில் செய்து விட்டார்கள். அது ஓரளவு தவிர்க்கப் பட்டிருக்கிறது. தவிர்க்கப்பட்டதோடு விடுவார்களா? தண்டனை தருகின்ற அளவுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா என்ற ஆவலோடு தமிழ்நாடு எதிர்பார்க்கிறது.
கேள்வி : திராவிட முன்னேற்றக் கழகம் எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும் என்று நினைக்கிறீர்கள்?
கருணாநிதி: தேவையான அளவுக்கு.
இவ்வாறு கருணாநிதி கூறினர்.