தாமிரபரணியில் ஒரு பிடி மணல் எடுக்கவும் அனுமதிக்க மாட்டோம்... நல்லக்கண்ணு கொந்தளிப்பு
தாமிரபரணி ஆற்றில் இனி எந்த இடத்திலும் சிறுபிடி அளவு மணல் எடுக்கவும் அனுமதிக்க மாட்டோம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினர் நல்லக்கண்ணு தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி: தாமிரபரணி ஆற்றில் இனி எந்த இடத்திலும் சிறுபிடி அளவு மணல் எடுக்கவும் அனுமதிக்க மாட்டோம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினர் நல்லக்கண்ணு கூறியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் ஆங்கிலேயர் ஆட்சியில் தாமிரபரணி ஆற்றில் கட்டப்பட்ட அணையானது முறையான பராமரிப்பின்றி மண் மேடானது. இதையடுத்து அணையை தூர் வாரக் கோரி தாமிரபரணி நதி நீர் பாதுகாப்பு தேசிய பேரவை அமைப்பாளர் நயினார் தலைமையில் பல்வேறு போராட்டம் நடந்தது.
பசுமை தீர்ப்பாயமும் தாமிரபரணியைத் தூர்வார 2015ல் உத்தரவிட்டது. இதைப் பயன்படுத்தி அதிக அளவில் தூர்வாரும் பணி என்ற பெயரில் மணல் கொள்ளை நடந்தது.
இதனால் பாதிக்கப்பட்ட அணை பாதுகாப்பு போராட்ட குழுவினர் தூர் வாரத் தடை கோரி பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய கட்டுபாட்டு குழு உறுப்பினர் நல்லக்கண்ணு நேரில் ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் தூர் வார பசுமை தீர்ப்பாயம் தடை விதித்தது.
இதுகுறித்து நல்லக்கண்ணு கூறுகையில், ஸ்ரீவைகுண்டம் அணை 7 பிரிவாகப் பிரிக்கப்பட்டு தூர்வாரத் திட்டமிடப்பட்டதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது. தூர் வார வேண்டும் என்ற பெயரில் பல கோடி மதிப்பிலான மணல் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆற்றில் உறைக் கிணறுகளில் அமைக்கப்பட்டுள்ள இடத்தின் அருகில் மணல் அள்ளியதால் குடிநீர் பிரச்சனையும் தலை தூக்கியுள்ளது. இதையடுத்து தற்காலிக போர்வெல் அமைத்து மாநகராட்சி நிர்வாகத்தினர் சமாளித்து வருகின்றனர். இங்கிருந்து ஒரு பிடி மண்ணை கூட இனி எடுக்க விடமாட்டோம் என்று ஆவேசமாக நல்லக்கண்ணு தெரிவித்தார்.