விவசாய பம்பு செட்டுகளில் மீட்டர் பொருத்தும் அரசு.. இலவச மின்சாரத்தை ரத்து செய்ய திட்டமா?
எந்தச் சூழலிலும் தமிழக விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படுவதை அரசு நிறுத்தாது என்று மாநில மின்துறை அமைச்சர் தங்கமணி உத்தரவாதம் அளித்துள்ளார்.
சென்னை: தமிழக விவசாயிகளுக்கு அரசால் வழங்கப்பட்டுவரும் இலவச மின்சாரத்தை எந்தக் காரணத்தை முன்னிட்டும் ரத்துச் செய்யமாட்டோம் என்று மின்துறை அமைச்சர் தங்கமணி உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
தமிழக விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தை நிறுத்த, தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகவும் அதனால், பம்பு செட்டுகளில் மீட்டர் பொருத்த திட்டமிட்டுள்ளதாகவும் விவசாயிகள் மத்தியில் தகவல் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் தமிழகம் முழுக்க விவசாயிகள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு மின்துறை அமைச்சர் தங்கமணி பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், " தமிழக விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் அரசு மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இதனை விரைவில் நிறுத்தி, கட்டண மின்சாரம் கொடுக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன.
அப்படி எந்த ஒரு திட்டமும் அரசிடம் இல்லை. பம்பு செட்டுகளில் மீட்டர் பொறுத்தப்படுவது என்பது மின்சார கணக்கீட்டுக்காக தான். மறைந்த முதல்வர் ஜெயலலிதா, தமிழக விவசாயிகளுக்கு மின்சாரம் இலவசமாகத்தான் வழங்கப்படும் அதற்கு மீட்டர் பொருத்தப்பட்டு கட்டணம் வசூலிக்கப்படும் என்ற நிலைக்கு செல்லமாட்டோம் என்று அறிவித்துள்ளார்.
அதனால் நாங்கள் இலவச மின்சாரத்தை ரத்துச் செய்ய மாட்டோம். எந்தக் காரணத்தை முன்னிட்டும் அரசு இலவச மின்சாரத்தை நிறுத்தாது. ரத்து என்று பரவுவதை யாரும் நம்ப வேண்டாம்" என்று தெரிவித்தார்.