பொய் வழக்குப் போட்டு சீமானைக் கைது செய்ய நாங்கள் விடமாட்டோம் - பெ.மணியரசன்
Recommended Video
சென்னை : பொய் வழக்குப் போட்டு சீமானை கைது செய்யவிட மாட்டோம் என்று காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளரும், தமிழ் தேசியப் பேரியக்கத்தின் தலைவருமான பெ.மணியரசன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நேற்று போராட்டத்தின் போது போலீசார் தாக்கப்பட்டதற்கு நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர், காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சட்டமன்ற உறுப்பினர்கள் தமிமுன் அன்சாரி, கருணாஸ், தனியரசு உள்ளிட்டோர், தமிழகம் வரும் பிரதமருக்கு உறுதியாக நாளை கறுப்புக்கொடி காட்டப்படும் என்றும், காவல்துறைக்கு ஆதரவாக ரஜினி கருத்து தெரிவித்து இருப்பதற்கு கண்டனமும் தெரிவித்தனர்.
இதில் பேசிய பெ.மணியரசன், காவல்துறையினரைத் தாக்கியதாக சீமான் மீது பொய் வழக்குப் போடப்பட்டுள்ளது. அதில் சீமானை நாங்கள் கைது செய்யவிடமாட்டோம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழகத்தை அவமானப்படுத்திய மோடி திரும்பி போக வேண்டும் என்றும், அவருக்கு மக்கள் அனைவரும் கறுப்புக்கொடி காட்ட வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
காவிரி விவகாரத்தில் தமிழகத்தில் இருந்து சென்றவர்களைச் சந்திக்காமல் புறக்கணித்தவர் மோடி. மத்திய அரசின் காலம் தாழ்த்தும் நடவடிக்கைகளுக்கு அவர் தான் காரணம் என்றும், பிரதமரை சந்தித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தும் தைரியம் தமிழிசைக்கும், பொன் ராதாகிருஷ்ணனுக்கும் இருக்கிறதா என்றும் மணியரசன் கேள்வியெழுப்பி உள்ளார்.