அதிமுகவை ஜெ.தீபா கைப்பற்றும் வரை ஓயமாட்டோம்: திண்டுக்கல் மாவட்ட தொண்டர்கள் ஆவேசம்
அதிமுகவை ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ.தீபா கைப்பற்றும் வரை ஓயமாட்டோம் என திண்டுக்கல் மாவட்ட அதிமுக தொண்டர்கள் தெரிவித்துள்ளனர்.
திண்டுக்கல்:அதிமுகவை ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ.தீபா கைப்பற்றும் வரை ஓயமாட்டோம் என திண்டுக்கல் மாவட்ட அதிமுக தொண்டர்கள் தெரிவித்துள்ளனர். ஜெயலலிதாவால் ஒதுக்கி வைக்கப்பட்ட மன்னார்குடி கும்பலுக்கு அதிமுகவில் எந்த பொறுப்பும் வழங்கக்கூடாது என்றும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஜெயலலிதா மறைவுக்குப் பின் போயஸ்கார்டனை குடும்பத்துடன் கைப்பற்றிய சசிகலா பின்னர் பொதுச்செயலாளராக பதவியேற்று அதிமுகவையும் கைப்பற்றினார். இதைத்தொடர்ந்து நடை, உடை என அனைத்திலும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை சசிகலா அப்படியே காப்பியடித்தார்.
சசிகலாவின் இந்த நடவடிக்கை அதிமுக அடிமட்ட தொண்டர்களிடையே கடும் எரிச்சலை ஏற்படுத்தியது. இதையடுத்து ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ.தீபாதான் அவரது அரசியல் வாரிசு எனக்கூறிய அதிமுக தொண்டர்கள் அவரை அத்தை விட்டுச்சென்ற பணியை தொட வலியுறுத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்லில் ஜெ.தீபா பேரவை
இதற்கு ஒப்புதல் அளித்துள்ள ஜெ.தீபா விரைவில் அரசியல் பணியை தொடங்குவேன் என அறிவித்தார். இதையடுத்து திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதியில் உள்ள சின்னாளப்பட்டியைச் சேர்ந்த அதிமுக தொண்டர்கள் முதற்கட்டமாக இளைய புரட்சித் தலைவி ஜெ.தீபா அம்மா பேரவையை தொடங்கினர்.
ஆர்வமுடன் படிவம் வாங்கும் தொண்டர்கள்
இந்நிலையில் சின்னாளபட்டி பேரூர் கழக அதிமுக முன்னாள் நகர செயலாளரும் அவைத் தலைவருமான கே.சக்கரபாணி தலைமையில் ஒருங்கிணைப்பாளர்கள் மாவட்ட மாணவரணி இணைச் செயலாளர் டி.ராஜபாண்டி, கேரள மாநில முன்னாள் அம்மா பேரவை செயலாளர் எஸ்.வி.சண்முகம் நகர இளைஞரணி இணைச் செயலாளர் அமுதம் ராஜேந்திரன், மேலவை பிரதிநிதிகள் கைத்தறி ஆறுமுகம், பிரபாகரன், ஒன்றிய விவசாய அணி செயலாளர் கணேசன், முன்னாள் பேரூராட்சி உறுப்பினர்கள் சுப்பையா, குணசேகரன், செல்வராஜ், ஆகியோர் தீவிர உறுப்பினர் சேர்க்கை பணியில் ஈடுபட்டுள்ளனர். ஏராளமான அதிமுக நிர்வாகிகள் மற்றும் அதிமுக தொண்டர்கள் தீபா பேரவை உறுப்பினர் சேர்க்கை படிவத்தை வாங்கி சென்றுள்ளனர்.
வீடுவீடாகச் செல்லும் பெண்கள்
இதுமட்டுமின்றி சின்னாளபட்டியில் உள்ள அனைத்து வார்டுகளில் உள்ள அதிமுக நிர்வாகிகள், வார்டு செயலாளர்கள், கூட்டுறவு சங்க தலைவர்கள் அதிக அளவில் உறுப்பினர் சேர்க்கை படிவத்தை வாங்கி தீவிரமாக உறுப்பினர்களை சேர்த்து வருகின்றனர். காமராஜர் சாலையில் உள்ள ஜவுளிக்கடைகள், டீ கடைகள் மற்றும் ஜவுளி வியாபாரிகளிடம் உறுப்பினர் சேர்க்கை படிவத்தை கொடுத்தும், பெண்கள் வீடுவீடாக சென்றும் உறுப்பினர்களை சேர்த்து வருகின்றனர்.
துரோகம் செய்த மன்னார்குடி கும்பல்
ஆத்தூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தீபா பேரவையில் இணையும் தொண்டர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து பேசிய அதிமுக நிர்வாகிகள் மறைந்த முதல்வர் ஜெயலலிதா துரோகி என்றும் தனக்கு துரோகம் செய்தவர்கள் என்று ஒதுக்கி வைக்கப்பட்ட மன்னார்குடி குடும்பத்தை சேர்ந்த யாருக்கும் அதிமுக கட்சியில் பொறுப்புகள் வழங்கக் கூடாது என்றார்.
சசிகலா விலக வேண்டும்
மேலும் அதிமுக பொதுச் செயலாளர் பதவியில் இருந்து சசிகலா விலக வேண்டும். இளைய புரட்சித்தலைவியும், அம்மாவின் உண்மையான வாரிசுமான ஜெ.தீபா அவர்களுக்கு அதிமுக பொதுச் செயலாளர் பதவி வழங்க வேண்டும் அவர் கூறினார்.
அதிமுகவை கைப்பற்றும் வரை பாடுபடுவோம்
அதோடு உள்ளாட்சி தேர்தலில் ஜெ.தீபா அவர்கள் யாருக்கு ஆதரவு தருகிறாரோ அவரின் வெற்றிக்கு பாடுபடுவோம் என சபதம் உறுதி எடுத்துள்ளோம். அதிமுகவை ஜெயலலிதாவின் வாரிசான ஜெ.தீபா அவர்கள் கைப்பற்றும் வரை தீபா அம்மா அவர்களுக்கு உறுதுணையாக இருப்போம் என்றும் கூறினார்.
திண்டுக்கல் மாவட்டத்தில்..
திண்டுக்கல் மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் அதிமுகவினர் ஜெ. தீபா பேரவையை தொடங்கி உள்ளனர். சசிகலாவுக்கு எதிரான அதிருப்தி அதிமுகவினரே இந்த பேரவையை தொடங்கியுள்ளனர். வேடசந்தூர் தொகுதியில் வேடசந்தூர், கோவிலூர் உள்ளிட்ட இடங்களில் ஜெ.தீபா பேரவை பேனர் வைக்கப்பட்டுள்ளது. எரியோடு பகுதியில் வைக்கப்பட்ட பேனருக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இருப்பினும் ஜெ.தீபா பேரவையினர் மாவட்டம் முழுவதும் உறுப்பினர் சேர்க்கையில் மும்முரமாக உள்ளனர்.