தமிழகத்தில் மீண்டும் வெளுக்கும் மழை.. அடுத்த 2 நாளைக்கு 9 மாவட்டங்களில் கன மழை பெய்யும்!
சென்னை: தமிழகத்தில் நெல்லை, ராமநாதபுரம், மதுரை, தேனி உள்பட 9 மாவட்டங்களில் 2நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் வறண்ட வானிலையே காணப்படும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவ மழை தமிழகத்தில் தீவிரம் அடைந்தள்ள நிலையில் இரண்டு நாள் இடைவேளைக்கு பின்னர் மீண்டும் நேற்று முதல் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. சேலம் மாவட்டத்தின் சுற்றுப்பகுதியில் கடந்த 3 நாட்களாக கடுமையான வெயில் நீடித்த நிலையில் அங்கு பலத்த மழை பெய்தது. குறிப்பாக சேலம், சங்ககிரி, ஆத்தூர் பகுதியில்
கனமழை பெய்தது.
இதேபோல் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, கூமாப்பட்டி, மகாராஜாபுரம், மல்லி, கோபாலபுரம் உள்ளிட்ட அதன் சுற்றுப்புறங்களில் கனமழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மக்கள் மகிழ்ச்சி
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் நாவினிபட்டி, சூரக்குண்டு, மில்கேட், எட்டிமங்களம் உள்ளிட்ட அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஒருமணி நேரத்திற்கு மேல் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
நாமக்கலில் கனமழை
நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு 10 மணி முதல் இடி, மின்னலுடன் மழை கொட்டியது. வயல்களில் தண்ணீர் தேங்கியது. மின்சாரமும் தடைபட்டது. தூத்துக்குடி மாவட்டம் கோவில் பட்டி பகுதியில் வெயில் குறைந்து நேற்று கனமழை பெய்தது. இதனால் குழுமையாக மாறியது. புதுக்கோட்டை, மணல்மேல்குடி, திருப்புனத்திலும் கனமழை பெய்தது.
வானிலை மையம்
இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்றி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த இரண்டு நாளைக்கு தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
9 மாவட்டங்களில்
குறிப்பாக நெல்லை, ராமநாதபுரம், மதுரை, தேனி, சேலம், நீலகிரி, தருமபுரி, நாமக்கல், கோவை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.
வறண்ட வானிலை
சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வறண்ட வானிலையே காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவிதுள்ளது. சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வறண்ட வானிலையே காணப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
சென்னையில் புகை
சென்னையில் கடந்த 3 நாட்களாக காற்றின் வேகம் இல்லாததால் புகைகள் தரை மட்டத்தில் உள்ளதாக தெரிவித்த வானிலை ஆய்வு மையம், வாகனம், தொழிற்சாலைகளின் புகைகள் தரை மட்டத்தில் உள்ளதால் சென்னை புகை மண்டலமாக காட்சியளிப்lபதாகவும் காற்றின் வேகம் அதிகரிக்கும் போது படிப்படியாக இயல்பு நிலைக்கும் திரும்பும் என்றும் கூறியுள்ளது.
புல்புல் புயல்
புல் புல் புயல் தற்போது அதிதீவிர புயலாக மாறி மத்திய மேற்கு வங்கக்கடல் அதனை ஒட்டியுள்ள பகுதியில் நிலை கொண்டிருப்பதால் மீனவர்கள் யாரும் அடுத்த 2 நாட்களுக்கு மத்திய மேற்கு வங்கக்கடல் மற்கும் வடக்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதிகபட்ச மழை
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சங்ககிரியில் 12 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாகவும் புதுக்கோட்டையில் 9 செ.மீ., மணல்மேல்குடி, திருப்புவனத்தில் தலா 8 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.