தமிழகத்தில் மீண்டும் பல இடங்களில் பலத்த மழை.. தென் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்!
சென்னை: வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், தென்மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில கடந்த மாதம் கியார், மகா என்ற இரண்டு புயல்கள் உருவானதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஓரளவு நல்ல மழை பெய்தது. தென்மாவட்டங்களில் கனமழை பெய்தது. சென்னையில் சிலநாட்கள் மிதமான மழை பெய்தது.
ஆனால் அதன்பிறகு பெரிய அளவில் தமிழகத்தில் மழை பெய்யவில்லை. வெயில் கடுமையாக இருந்தது.
திடீர் வெள்ளப்பெருக்கு.. சதுரகிரி மலைக்கோயிலுக்கு சென்ற 100க்கு மேற்பட்ட பக்தர்கள் தவிப்பு
நேற்று திடீர் மழை
இந்த சூழலில் நேற்று பிற்பகல் சென்னையில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து மிதமான மழை பெய்தது. மயிலாப்பூர், ஈக்காட்டுத்தாங்கல்,வேளச்சேரி, தாம்பரம், திருவல்லிக்கேணி உள்பட நகரின் பல இடங்களில் நேற்று மழை பெய்தது. இந்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சேலத்தில் கனமழை
இதேபோல் நேற்று மாலை மதுரையிலும் கனமழை பெய்தது. இடிமின்னலுடன் இரண்டு மணி நேரத்திற்கு மேல் மழை நீடித்தது. சேலத்தில் நேற்று அதிகாலை விடிய விடிய கனமழை பெய்தது. விருதுநகர் மாவட்டத்திலும் நேற்று கனமழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கனமழைக்கு வாய்ப்பு
இந்நிலையில் இன்றும் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. தென்மாவட்டங்களில் அனேக இடங்களில் மிதமான மழையும். ஒரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
புல்புல் புயல்
புல்புல் புயல் காரமணாக ஒடிசா மற்கு வங்கத்தை ஒட்டிய கடல் பகுதிக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம். தமிழக கடலோர பகுதியில் எந்தவிதமான எச்சரிக்கையும் இல்லை. நேற்று காலை நிலவரப்படி சேந்தமங்கலத்தில அதிகபட்சமாக 14செமீ மழை பெய்தது. ஒமலூர், செங்கத்தில் 9 செமீ மழை பெய்தது.