இடியோடு மழை... வறண்ட வானிலை - 5 நாட்களுக்கு தமிழக கிளைமேட் இதுதான்
தமிழகம், புதுச்சேரியில் 5 நாட்களுக்கு மழை, வெயில் எப்படி சென்னை வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
Recommended Video
சென்னை: தென் தமிழகத்தில் இடியுடன் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது.
மாலத்தீவு பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கோடை வெப்பம் வாட்டி எடுத்து வருகிறது. குளிர் பிரதேசங்களை மக்கள் நாடத்தொடங்கிவிட்டனர். இயற்கை குளிர்பானங்களை குடித்து தாகத்தை தணித்து வருகின்றனர். மழைகாலம் என்றால் தினசரி வானிலை எச்சரிக்கை வெளியாகும்.
வெயில் காலத்தை முன்னிட்டு தமிழகம், புதுவையில் கோடைமழை எப்படி எங்கு, எப்போது பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் குமரி மற்றும் அதனை ஒட்டியுள்ள மாலத்தீவு பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி நிலவுவதாக கூறியுள்ளது. இதனால்தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.
27ஆம் தேதியான இன்று தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இன்று மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும் வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளது. வட தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலையே காணப்படும் என கூறப்பட்டுள்ளது.
28ஆம் தேதியான நாளை தமிழகம் மற்றும் புதுவையின் சில இடங்களில் வறண்ட வானிலை காணப்படும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
29,30ஆம் தேதிகளில் தமிழகம் மற்றும் புதுவையின் சில இடங்களில் லேசான மழை அல்லது இடியுடன் மழை பெய்யும் என்றும் கடலோர மாவட்டங்கள் அல்லது புதுச்சேரியில் வறண்ட வானிலையும் நிலவும் என கூறியுள்ளது.
31ஆம் தேதியான சனிக்கிழமையன்று தமிழகத்தின் உட்பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை மற்றும் இடியுடன் கூடிய மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவையில் வறண்ட வானிலையும் நிலவும் என வானிலை மைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் பகுதியில் 1 செமீ மழை பெய்துள்ளது.