ஆர்கே நகர் பணப்பட்டுவாடா விவாகரத்தில் வழக்கு பதியப்பட்டதா.. ஸ்டாலின் அடுக்கடுக்கான கேள்வி
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டது குறித்து வழக்குப் பதியப்பட்டதா என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை அடுக்கடுக்காக சட்டசபையில் ஸ்டாலின் எழுப்பினார்.
சென்னை: எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டது குறித்து வழக்குப் பதியப்பட்டதா என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை அடுக்கடுக்காக சட்டசபையில் இன்று எழுப்பினார்.
தொடர்ந்து மு.க. ஸ்டாலினுக்கு சபாநாயகர் பேச அனுமதி மறுத்த நிலையில் அமளி ஏற்பட்டது. இதனையடுத்து அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா குறித்து சட்டசபையில் இன்று திமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தது. அதன் மீது பேசிய மு.க.ஸ்டாலின், தேர்தல் ஆணைய உத்தரவுப்படி ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா குறித்து வழக்குப் பதியப்பட்டதா? என்று கேட்டார்.
மேலும், முதல்வர் மற்றும் அமைச்சர்கள் கைது செய்யப்படவேண்டும் என்று கூறப்பட்டுள்ளதே அதன்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்று அடுக்கடுக்காக கேள்வி எழுப்பினார். அவரைத் தொடர்ந்து பேச சபாநாயகர் அனுமதி மறுத்தார்.
இதனை அடுத்து திமுக எம்எல்ஏக்கள் ஸ்டாலின் தொடர்ந்து பேச அனுமதிக்க வேண்டும் என்று குரல் கொடுத்தனர். அதற்கு அதிமுக எம்எல்ஏக்கள் தரப்பில் இருந்து எதிர்க் குரல்கள் எழும்பின. இதனையடுத்து அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
முடிவில் ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.