இடி, மின்னல் சூறைக்காற்றுடன் கனமழை பெய்யும் - வானிலையின் கூல் எச்சரிக்கை
தமிழகத்தின் உள் மாவட்டங்களில் சூறைக்காற்று, இடியுடனும் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது
சென்னை: தமிழகத்தின் உள் மாவட்டங்களான வேலூர், தருமபுரி, சேலம், திருச்சி, மதுரை உள்ளிட்ட 19 மாவட்டங்களில் சனிக்கிழமை ஓரிரு இடங்களில் சூறைக்காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
ஏப்ரல் மாதத்தில் கடந்த 3 வாரங்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், பல நகரங்களில் வெள்ளிக்கிழமை வெப்பம் சற்று தணிந்து காணப்பட்டது. இருப்பினும் 11 நகரங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் கொளுத்தியது.
சதமடித்த வெப்பநிலை
அதிகபட்ச வெப்பநிலையாக கரூர் பரமத்தியில் 107.6, திருத்தணியில் 106.7, திருச்சியில் 105.98, பாளையங்கோட்டையில் 105.8, வேலூரில் 105.44, மதுரையில் 105.08, திருப்பத்தூரில் 104, சேலத்தில் 103.46, தருமபுரி மற்றும் கோவையில் தலா 100.4, சென்னையில் 100.04 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
இடியுடன் கூடிய மழை
வெள்ளிக்கிழமையன்று 11 நகரங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெயில் கொளுத்தியது. இந்நிலையில், தமிழகத்தின் உள் மாவட்டங்களில் சூறைக்காற்றுடனும், இடியுடனும் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
19 மாவட்டங்களில் சூறைக்காற்று
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பச் சலனம் காரணமாக உள் மாவட்டங்களான வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கோவை, ஈரோடு, கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், மதுரை ஆகிய 19 மாவட்டங்களில் சூறைக்காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறியுள்ளார்.
அக்னி நட்சத்திரம்
அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் காலம் மே 4 முதல் தொடங்க உள்ளது. இந்த சூழ்நிலையில் மழை பெய்தால் அனலின் தாக்கம் குறைய வாய்ப்பு உள்ளது. இத்தனை நாட்கள் வெயில் கொளுத்திய நிலையில் கடும் வறட்சியினால் தண்ணீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. வருணபகவான் கருணை வைத்தால் மட்டுமே புழுக்கம் தணிவதோடு குடிநீர் பிரச்சினையும் தீரும் .