மீனாட்சி அம்மன் கோயில், தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலக இணையதளங்கள் முடக்கம்: பாகிஸ்தான் கொடி பறக்கிறது
மதுரை/தஞ்சாவூர்: மதுரை மீனாட்சியம்மன் கோயில் இணையதளம் பயங்கரவாதிகளால் முடக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நுாலக இணையதளத்திற்குள், பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பு என்ற பெயரில் மர்ம நபர்கள் ஊடுருவி (ஹேக்) செய்து முடக்கி உள்ளனர். அதன் முகப்பு பக்கத்தில் பாகிஸ்தான் தேசியக் கொடி பறக்கிறது.இந்நிலையில் மதுரை மீனாட்சியம்மன் கோயில் இணையதளமும் நேற்றிரவு முதல் முடக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நுாலகத்தில், சோழர்கள், நாயக்கர்கள் மற்றும் மராட்டியர்கள் ஆட்சிக் காலங்களைச் சேர்ந்த, ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஓலைச்சுவடிகள், காகிதச் சுவடிகள் மற்றும் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட ஆவணங்கள் உள்ளன.நுால்களாக...இந்த ஓலைச்சுவடிகள் மற்றும் காகிதச் சுவடிகளில் உள்ள தகவல்கள், 500க்கும் அதிகமான நுால்களாக வெளியிடப்பட்டுள்ளன.
அதுமட்டுமின்றி, www.tmssmlibrary.in என்ற முகவரியில், நுாலகத்தில் அதிகாரப் பூர்வமான இணையதளம் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம், நுால்களை வாங்கும் வசதி உட்பட, பல சேவைகள் வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டது.
தற்போது, இந்த இணையதளத்திற்குள், பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பு என்ற பெயரில், மர்ம நபர்கள் ஊடுருவி (ஹேக்) முடக்கி உள்ளனர். இரண்டு நாட்களுக்கு மேலாக, நுாலக இணையதள முகவரிக்கு சென்றால், அதன் முகப்பு பக்கத்தில், பாகிஸ்தான் தேசியக் கொடி பறக்கிறது.
அதன் கீழ், 'ஹேக் பை அமீர் ஹேக்ஸர்' என்று, ஆங்கிலத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது. மேலும், 'பிரீடம் ஆப் காஷ்மீர் இஸ் ஹவர் மிசன்' என்ற வாசகங்களும் இடம் பெற்றுள்ளன.இந்த இணையதளம், மர்ம நபர்களால் ஊடுருவப்பட்டுள்ள தகவல், சனிக்கிழமையன்று மாவட்ட ஆட்சியர் மற்றும் நுாலக இயக்குனர் (பொ) சுப்பையனுக்கு தெரியவந்தது. இதையடுத்து, நுாலகர் சுதர்சனிடம் தொடர்பு கொண்டு, அந்த தகவலை கூறினார்.
சரஸ்வதி மகால் நூலகத்தில், ஊழியர் பற்றாக்குறை உள்ளது. நுாலகத்திற்கு 20 ஆண்டுகளாக முழு நேர இயக்குனர் இல்லை. தமிழில் முதல் முறையாக மொழி பெயர்க்கப்பட்ட பைபிள், இந்த நுாலகத்தில் இருந்தது. தரங்கம்பாடியில் அச்சிடப்பட்ட அந்த பைபிளில், சரபோஜி மகாராஜாவின் கையெழுத்தும் இருந்தது. 10 ஆண்டுகளுக்கு முன் இந்த தமிழ் பைபிள் திருடப்பட்டது. அதுபற்றி போலீசில் புகார் கூட செய்யப்படவில்லை. இருப்பினும், நுாலக ஊழியர்கள் நான்கு பேர் தண்டிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது நுாலகத்தில் இணையதள சேவையை பயங்கரவாதிகள் முடக்கியுள்ளனர். அதை நிறுத்தி வைக்க நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். மேலும், போலீசில் எந்தவிதமான புகாரும் கொடுத்ததாக தெரியவில்லை.
மீனாட்சியம்மன் கோவில் இணையதளம்
இந்நிலையில் மதுரை மீனாட்சியம்மன் கோயில் இணையதளமும் நேற்றிரவு முதல் முடக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கோயில் நிர்வாகத்தினர் போலீசில் புகார் அளித்தனர். கமிஷனர் சஞ்சய் மாத்துார் தலைமையில் போலீசார் நடத்திய விசாரணையில் அமெரிக்காவில் வசிக்கும் அப்சல் என்பவர் இணையதளத்தை முடக்கியது தெரிந்துள்ளது.