ஜெ.வுக்கு தண்டனை அளித்த குன்ஹா தீர்ப்பின் 10 அம்சங்கள்
சென்னை: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை அளித்த நீதிபதி குன்கா மொத்தம் 1136 பக்கங்களில் தீர்ப்பு அளித்துள்ளார்.
கணக்கு காட்டவில்லை
முதல்வராகப் பதவியேற்ற முதல் 27 மாதங்களில் மாதம் வெறும் ஒரு ரூபாய் மட்டும் அடையாள வருமானமாக ஜெயலலிதா பெற்றிருக்கிறார். நடிகை என்ற வகையில் அவர் சொத்து சேர்த்திருக்க முடியும் என்றாலும், அவர் பெயரிலான சொத்துகளுக்கு விளக்கம் தர அது போதுமானதாக இல்லை. அவருடன் சேர்த்து குற்றம்சாட்டப்பட்ட இதர 3 எதிரிகளும் எந்த வேலைக்கும் செல்லவில்லை, அவர்களுக்கென்று ஊதியமும் இல்லை.
நம்ப முடியாதவை.
சொத்துகளை வாங்குவதற்கான பணம் ஏனைய 3 பேரிடமிருந்துதான் வந்தது; ஜெயலலிதாவுக்கு அதைப் பற்றி எதுவும் தெரியாது என்று வாதாடப்பட்டது. முதலமைச்சராக இருக்கும் ஜெயலலிதாவுக்குத் தனது வீட்டிலேயே வசிக்கும் மூன்று பேருடைய நடவடிக்கைகள் தெரியாது என்பதை நம்ப முடியவில்லை. அந்த மூன்று பேருக்கும் வருமானம் கிடையாது என்கிற போது அது ஜெயலலிதாவுடைய பணம்தான் என்ற முடிவுக்கு வர வேண்டியிருக்கிறது.
மூவரணி
சுதாகரனும் இளவரசியும் 1991 முதல் 1996 வரையில் ஆறு நிறுவனங்களில் இயக்குநர்களாகச் சேர்ந்துள்ளனர். 1991 முதலே இந்த நிறுவனங்கள் இருந்தாலும் எதிரிகள் இதில் சேர்ந்த பிறகுதான் வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டன. இதே காலத்தில் ஏற்பட்ட 18 நிறுவனங்களில் குறிப்பிடத் தக்க வரவு-செலவு நடவடிக்கைகள் ஏதும் நடைபெறவில்லை. ஆனால், பெரிய அளவில் நிலம் வாங்கப்பட்டுள்ளது. இதற்காக ஜெயா பப்ளிகேஷன்ஸ் என்ற நிறுவனத்திலிருந்து தரப்பட்டிருக்கிறது.
ஆடம்பரத் திருமணம்
திருமணத்துக்கு முன்னதாக சுதாகரனை வளர்ப்பு மகன் என்று ஜெயலலிதாவே அறிவித்திருக்கிறார். திருமணத்துக்காகப் பந்தல் அமைத்தது முதல் திருமணச் சடங்குகளை நடத்தியது, திருமணத்துக்கான பொருட்களை வாங்கியது என்று அனைத்துக்கும் ஜெயலலிதாதான் செலவிட்டிருக்கிறார். பெண்ணின் தகப்பனார் 14 லட்ச ரூபாய் செலவு செய்திருக்கிறார். திருமணத்துக்கு நான் செலவிடவில்லை என்று ஜெயலலிதா கூறியிருந்தாலும், 1996-97-ம் ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கில் திருமணத்துக்காக ரூ.29.92 லட்சம் செலவிட்டதாகக் கணக்கு காட்டியிருக்கிறார். எல்லா மூல ஆவணங்களும் ரசீதுகளும் காசோலைகளும் ஜெயலலிதாவின் தணிக்கையாளரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவற்றிலிருந்தே முழுச் செலவையும் அவர்தான் செய்திருக்கிறார் என்பது நிரூபணமாகிறது.
செருப்பு, புடவைகள் வாதம் நிராகரிப்பு
ஜெயலலிதாவின் வீட்டில் 386 ஜோடி செருப்புகள், 914 பட்டுப்புடவைகள், 6,195 இதர புடவைகள், 2,140 பழைய புடவைகள், இதர ஆடைகள் ஆகியவை தொடர்பாக ஊழல் தடுப்பு இயக்குநரகம் அளித்த கணக்கு தள்ளுபடிசெய்யப்படுகிறது. இவையெல்லாம் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோதுதான் வாங்கினார் என்பதற்கு ஆதாரங்கள் இல்லை. அதேவேளையில், மொத்தமிருந்த 27.588 கிலோ தங்க நகைகளில் சுமார் 20 கிலோ வருவாய்க்குப் பொருந்தாதவை.
கருணை கிடையாது
இந்த வழக்கு அரசியல் எதிரிகளால் புனையப்பட்டது என்றும் 18 ஆண்டுகள் கடந்துவிட்டது என்றும் இந்தக் காலகட்டத்தில் மன உளைச்சலும் வேதனையும் அடைந்திருப்பதாக குற்றம்சாட்டப்பட்டோர் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கு தொடரப்பட்ட பிறகு, ஜெயலலிதா 11 ஆண்டுகளாக முதலமைச்சராக இருந்துவருவதாகவும் இப்போது அவர் மீது எந்தக் குற்றச்சாட்டும் இல்லையென்றும் வாதிட்டுள்ளனர். உடல்நலக்குறைவு காரணமாகக் கருணை காட்டுமாறும் கோரியுள்ளனர். இந்தக் காரணங்கள் எதுவும் கருணை காட்டுவதற்கு ஏற்றவை அல்ல. இந்த வழக்கு 18 ஆண்டுகளாகத் தாமதமானதற்கு யார் காரணம் என்று இப்போது ஆராய வேண்டியதில்லை. நீதியைக் குழிதோண்டிப் புதைக்க முயற்சி நடப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்ததால்தான், வழக்கு விசாரணை பெங்களூருக்கு மாற்றப்பட்டது.
கனிவு இல்லை
ஊழல் செய்த அரசு ஊழியருக்கு ஓராண்டுக்குக் குறையாமலும், 7 ஆண்டுகளுக்கு மிகாமலும் சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்க ஊழல் தடுப்புச் சட்டத்தின் 13(2)வது பிரிவு வகை செய்கிறது. அதைப் பயன்படுத்த வேண்டியுள்ளது. மிக உயர்ந்த பதவியில் இருந்துகொண்டு ஜெயலலிதா இந்தச் செயலில் ஈடுபட்டதுதான் குற்றத்தின் தன்மையை அதிகரிக்கிறது.
‘மன்னன் எவ்வழி, மக்கள் அவ்வழி' என்று பழமொழியுள்ளது. உயர் பதவியில் இருப்பவர்களின் தவறுகள் மீது கனிவோ இரக்கமோ காட்டினால், அது ஒட்டுமொத்த சமூக வாழ்க்கைக்கும் கேடாக முடியும் என்று கர்நாடக உயர் நீதிமன்றம் ஒரு வழக்கில் தீர்ப்பளித்திருக்கிறது. எனவே, இந்த வழக்கில் கனிவுக்கோ அனுதாபத்துக்கோ இடமில்லை.
தண்டனை என்ன?
குற்றத்தின் தீவிரம், சொத்துகளின் மதிப்பு, அவை பெறப்பட்ட முறை ஆகியவற்றின் அடிப்படையில்தான் தண்டனையைத் தீர்மானிக்க முடியும். அப்படிப் பார்க்கும்போது, இது கடுமையான தண்டனைக்குரியது. சட்டம் வழங்கியுள்ள அதிகபட்ச தண்டனையில் பாதிக்குமேல் விதித்தால்தான் நீதி நிலைநாட்டப்படும் என்பதால் 4 ஆண்டுகள் விதிக்கப்படுகிறது.
ஊழலை அளவிடுவது...
ஊழலை அளவின் அடிப்படையில் தீர்மானிக்கக் கூடாது. ஊழல்தான் ஒழுங்கீனத்தின் தாய். அது சமூக முன்னேற்றத்தை அழிக்கிறது, தகுதியற்ற ஆசைகளை வளர்க்கிறது, மனசாட்சியைக் கொல்கிறது, மனித நாகரிகத்தையே குலைக்கிறது
இவ்வாறு குன்ஹா தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.