அரசுப்பள்ளி ஆசிரியர்கள் பணி நியமனத்தில் வெயிட்டேஜ் முறையை தொடர முடிவு செய்துள்ளது தமிழக அரசு
அரசுப்பள்ளி ஆசிரியர்கள் பணி நியமனத்தில் வெயிட்டேஜ் முறையை தொடர தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
சென்னை : தமிழக அரசுப்பள்ளிகளில் உள்ள காலியிடங்களை உடனடியாக நிரப்ப அரசு முடிவு செய்துள்ளது. இந்த நியமனத்தில் வெயிட்டேஜ் முறையைத் தொடர திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழக அரசுப்பள்ளி ஆசிரியர்கள் நியமனத்தில் வெயிட்டேஜ் முறை 2013ம் ஆண்டில் இருந்து பின்பற்றப்பட்டு வருகிறது. இதனால் பாதிக்கப்படுபவர்களுக்கு இதுகுறித்து முறையிட்டதால் அதைத் தொடர்வது குறித்து பரிசீலிப்பதாக அரசு தெரிவித்து வந்தது.
இந்நிலையில், ஆசிரியர் நியமனம் TET தேர்வு முறையிலா அல்லது வெயிட்டேஜ் முறையிலா என்கிற குழப்பம் கடந்த சில ஆண்டுகளாக நிலவி வந்தது.
தற்போது அரசுப்பள்ளிகளில் உள்ள காலி இடங்களை நிரப்ப அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்கு ஏற்கனவே இருந்தது போல வெயிட்டேஜ் முறையை பின்பற்றவும் அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி இடைநிலை ஆசிரியர்கள் நியமனத்துக்கு 12ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்ணுக்கு 15 மதிப்பெண்ணும், டிப்ளமோவில் பெற்ற மதிப்பெண்ணுக்கு 25 மதிப்பெண்களும் சேர்க்கப்படும். அதோடு TET தேர்வில் எடுத்த மதிப்பெண்ணுக்கு 60 மதிப்பெண்கள் என மொத்தம் 100 மதிப்பெண்ணுக்கு கணக்கிடப்படும். இதன்படி ஆசிரியர் தேர்வு நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது.