எடை குறைப்பு சிகிச்சை... 9 முறை அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண் பலி... சென்னையில் விபரீதம்
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் எடைக்குறைப்புக்காக அறுவை சிகிச்சை மேற்கொண்ட பெண் பலியானார்.
சென்னை: கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் எடை குறைப்பு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட திருவண்ணாமலையைச் சேர்ந்த பெண் ஒருவர் பலியானார்.
திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் வளர்மதி (45). இவர் 150 கிலோ எடையுடன் இருந்தார். இவரது இரு மகள்கள், மகனும் இதேபோல் அதிக எடையுடன் இருந்தனர்.
இந்நிலையில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் எடைக் குறைப்பு மருத்துவமனையில் ஆலோசனை கேட்பதற்காக அங்கு 4 பேரும் சென்றனர். அப்போது அவர்களிடம் பேசிய மருத்துவர்கள், இத்தனை உடல் எடையுடன் இருந்தால் ரத்தத்தை உடல் உறுப்புகளுக்கு அனுப்பும் இதயம் செயலிழந்துவிடும். இதனால் 4 பேரின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று கூறியுள்ளனர்.
மேலும் ஒரே குடும்பத்தை சேர்ந்த நீங்கள் அறுவை சிகிச்சை செய்து கொண்டால் சலுகை விலை கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளனர். இதனால் அச்சம் அடைந்த வளர்மதி கடந்த ஆகஸ்ட் 23-ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கும், அவரது இரு மகள்கள், மகனுக்கும் ஒரே நாளில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் வளர்மதி அதிக எடை கொண்டிருந்ததால் அவருக்கு நேற்றிரவு 9-ஆவது முறையாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
அறுவை சிகிச்சைக்கு பின்னர் வளர்மதிக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதை தொடர்ந்து அவர் இன்று அதிகாலை உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வளர்மதியின் கணவர் போலீஸில் புகார் அளித்துள்ளார்.