பொய் வழக்குப் போடுறாங்க.. காப்பாத்துங்க.. முதல்வர் கார் முன் பொத்தென்று விழுந்தவர்களால் பரபரப்பு!
முதலமைச்சரின் வாகனம் முன்பு சிலர் விழுந்து மனு அளித்தனர்.
Recommended Video
கிருஷ்ணகிரி: திருப்பதி செல்லும் தமிழக முதலமைச்சருக்கு கிருஷ்ணகிரியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வரவேற்பின்போது, பொய் வழக்குப் போடும் போலீசாரிடம் இருந்து தங்களது ஆட்களை மீட்டுத்தரக்கோரி சிலர் முதலமைச்சரின் வாகனத்தின் முன்பு விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று திருப்பதி செல்கிறார். இதனால் சேலத்தில் இருந்து புறப்பட்ட அவர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் மாவட்டங்கள் வழியாக திருப்பதி செல்கிறார். ஒவ்வொரு மாவட்டத்திலும் முதல்வருக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர்.
அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சேலம் மேம்பாலம் சந்திப்பில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த வரவேற்பின்போது மாவட்ட ஆட்சியர் கதிரவன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். தொண்டர்களை சந்தித்து விட்ட பின்னர், முதலமைச்சர் வேலூர் நோக்கி காரில் புறப்பட்டார்.
அப்பொழுது திடீரென்று சுமார் ஐந்து பேர் முதல்வரின் வாகனத்தின் முன்பு திடீரென்று விழுந்தனர். இதனையடுத்து, முதல்வரின் பாதுகாவலர்கள் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அப்போது எல்லமால் என்பவர் முதல்வரிடம் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
ஓசூர் அடுத்த சானசந்திரம் பகுதியை சேர்ந்த இருளர் இன மக்கள் நாங்கள். கடந்த சனிக்கிழமை அட்கோ போலீசார் எங்களது ஆட்கள் 5 பேரை விசாரணைக்கு என்று அழைத்து சென்றனர். அழைத்து சென்ற போலீசார் எங்களது ஆட்களை அடித்து துன்புறுத்தி சந்தனமரம் கடத்தியதாக ஒப்புக்கொள்ள சொல்கின்றனர். எந்தவித ஆதாரமும் இல்லாமல் எங்களது ஆட்களை அழைத்து சென்று சந்தனமரம் கடத்தியதாக பொய் வழக்கு போட முயற்சி செய்கிறார்கள். ஆகவே அவர்களை மீட்டு தரவேண்டும்" என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
முதலமைச்சரின் வாகனத்தின் முன்பு திடீரென 5 பேர் விழுந்த செயல் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.